தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆலங்குளம் அருகேயிருக்கும் கரும்புலியூத்து கிராமத்தை சார்ந்தவர் காளிமுத்து. இவர் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க ஆலங்குளத்திற்கு வந்து, பொருட்களை வாங்கியுள்ளார்.
மது அருந்தும் பழக்கத்தை கொண்ட காளிமுத்து, அங்குள்ள அரசு மதுபான கடையில் மதுபானம் வாங்கி அருந்தியுள்ளார். இதன்பின்னர், வீட்டிற்கு செல்ல முடிவெடுத்த நிலையில், தள்ளாடிய போதையில் சாலையில் இருந்துள்ளார்.
இதன்போது, அவ்வழியாக வந்த திருநெல்வேலி செல்லும் விரைவு பேருந்தில் ஏறி கரும்புலியூத்து செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார்.
ஆனால், அந்த பேருந்தின் நடத்துனர் கரும்புலியூத்து நிறுத்தத்தில் பேருந்து நிற்காது, 10 நிமிடம் பொறுத்து பின்னால் வரும் உள்ளூர் பயண பேருந்தில் ஏறி வரச்சொல்லி அறிவுறுத்தியுள்ளார்.
போதையில் இருந்த காளிமுத்து, என் ஊரில் பேருந்து நிற்காதா? என்று கேள்வியை எழுப்பி, பேருந்துக்கு முன்புறம் வந்து பேருந்தை புறப்படவிடாமல் தகராறு செய்துள்ளார். பேருந்தின் ஓட்டுநர் பேருந்தை இயக்க முயற்சிக்கவே, பேருந்தின் முன்புறம் ஏறி நின்று பயணம் செய்துள்ளார்.
சில அடி தூரம் குறைந்த வேகத்தில் பேருந்தை இயக்கிய ஓட்டுநர், குடிபோதை ஆசாமி கீழே விழுந்துவிட்டால் தேவையில்லாமல் வழக்கை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதால் பேருந்தை நிறுத்தியுள்ளார். பேருந்தில் இருந்து இதனை கவனித்துக்கொண்டு இருந்த நடத்துனர், பேருந்தை விட்டு கீழே இறங்கியதும் குடிபோதை ஆசாமியை பேருந்தை விட்டு தள்ளி நிறுத்தியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த காளிமுத்து பேருந்து நடத்துனருடன் சண்டையிடவே, ஆத்திரத்தில் குடிபோதை ஆசாமிக்கு கன்னத்தில் 4 அடி விட்டு பதில் சொன்னார். இதன்பின்னர் பேருந்து அங்கிருந்து புறப்பட்டு சென்றது.