மாணவர்கள் நலன்கருதி சனிக்கிழமையினை விடுமுறை நாளாக அறிவிக்க மாண்புமிகு. முதல்வர் அவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது குறித்து இச்சங்கத்தில் மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம்: கொரோனா பெருந்தொற்று பரவலை கட்டுபாட்டிற்குள் கொண்டுவந்ததற்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் தமிழ்நாடு அரசினைப் பாராட்டி வரவேற்கின்றோம். மேலும் கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் தொலைக்காட்சி மற்றும் இணையதளம் மூலம்பாடம் நடத்தப்பட்டு வந்தது.
கொரோனா கட்டுக்குள் வரும்போது பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் நலன்கருதி நேரிடை பயிற்சிமட்டுமே மாணவர்களை செம்மைப்படுத்தமுடியும் என்பதை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் தொடர்ந்து வலியுறுத்தியதன் அடிப்படையில் 9,10,11,12 ஆம் வகுப்புளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது பெருமகிழ்ச்சியும் நன்றியும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
அதேவேளையில் தொடர்ந்து 9 மாதங்களாக வீட்டிற்குள் முடங்கியிருந்த மாணவர்கள் தற்போது பள்ளிக்கு வரத்தொடங்கியுள்ளார்கள். ஆனாலும் சனிக்கிழமைகளில் மாணவர்களின் வருகைக் குறைவாகவே உள்ளது. முன்பெல்லாம் தொடர் பள்ளிகள் நடக்கும்போது சனிக்கிழமை ஏன் ஞாயிற்றுக்கிழமை களில் கூட சிறப்பு வகுப்புகளுக்கு 100 சதவீதம் மாணவர்கள் வருகைத்தருவார்கள். ஆனால் தற்போது சனிக்கிழமைகளில் வருகைப்பதிவு மிகக்குறைவாகவே உள்ளது.
காரணம் கொரோனா பெருந்தொற்று பாதுகாப்பு நடவடிக்கைக்குப்பிறகு தொடர்ச்சியாக ஆறுநாள்கள் பள்ளிக்கு மாணவர்கள் வருவது அவர்களின் விளையாட்டு உள்ளிட்ட சுதந்திரம் பறிக்கப்படுவதாக எண்ணி மனஅழுத்தத்திற்கு உள்ளாகுகின்றார்கள்.
இதனால் கற்றலில் மாணவர்களின் கவனம் சிதறுகிறது. ஆகையால் பள்ளிக்கு வருகைப்புரியும் மாணவர்களை தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ளும் வகையில் வாரத்தில் ஐந்து நாள்கள் மட்டும் பள்ளிவேலை நாளாக இயங்குவதற்கு ஆவனசெய்யும்படி மாண்புமிகு. முதல்வர் அவர்களை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகின்றேன்.