தமிழகம் உட்பட நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளைக் கடக்க வாகனங்களுக்கு ஃபாஸ்டேக் முறையில் சுங்கக் கட்டணம் செலுத்தும் முறை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. அட்டை இல்லாத வாகனங்களுக்கு இரு மடங்கு கட்டணம் வசூல் செய்யப் படும் என்ற அறிவிப்பால், வாகன ஓட்டிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.
அனைத்து வாகனங்களும் ‘ஃபாஸ்டேக்’ கட்டாயம் பெற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அதற்கான காலஅவகாசத்தை நீட்டிக்குமாறு வாகன உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்று, அரசும் இரு முறை காலக்கெடுவை நீட்டித்தது.
அதில், இந்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் பாஸ்டேக் கட்டாயம் என்று அறிவிக்கப் பட்டிருந்த நிலையில், வாகன் உரிமையாளர்களின் வேண்டுகோளை ஏற்று பிப்ரவரி 15ஆம் தேதி வரை காலக் கெடு மீண்டும் நீட்டிக்கப்பட்டது. இந்த இடைப்பட்ட காலங்களில், சுங்கச்சாவடிகளில், பாஸ்டேக் வாகனங்களுக்கு அதிக வழிகளும், பணம் கொடுத்துச் செல்லும் வாகங்களுக்கு என ஒரு பிரத்யேக வழியும் என சுங்கச்சாவடிகளில் அமைக்கப் பட்டிருந்தது.
இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள 48 சுங்கச்சாவடிகளிலும் நள்ளிரவு முதல் வாகனங்களுக்கு பாஸ்டேக் முறையில் சுங்கக் கட்டணம் செலுத்தும் முறை அமலுக்கு வந்துள்ளது. பாஸ்டேக் இல்லாமல் சுங்கச்சாவடிக்கு வரும் வாகனங்களுக்கு இரு மடங்கு கட்டணம் வசூலிக்கப் படும் என்றும் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
வாகன ஓட்டிகள் பாஸ்டேக் பெறுவதற்கென அனைத்து சுங்கச்சாவடிகளுக்கும் அருகே முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், இணையதளத்திலும் விண்ணப்பித்து பாஸ்டேக் பெற்றுக்கொள்ளலாம்.