திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு உசிலம்பட்டிச் சாலையில், சார்பு ஆய்வாளர் தலைமையிலான போலீஸார் வழக்கமான வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
அப்போது, வத்தலக்குண்டு நோக்கி வந்துகொண்டிருந்த ஒரு காரை மறித்து சோதனை செய்ததில், காரில், கட்டுக்கட்டாக கறுப்புக் காகிதங்கள் இருந்திருக்கின்றன. காரை ஓட்டிவந்த நபரை விசாரித்ததில், அவர், முன்னுக்குப் பின் முரணாகப் பேசவே, சந்தேகமடைந்த போலீஸார், அந்த நபரை காவல்நிலையம் அழைத்துச் சென்றனர்.
விசாரணையில், அந்த நபர் பெயர் நல்லமலை (வயது48) என்பதும், உசிலம்பட்டிப் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.
மேலும், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், `நான் வைத்திருக்கும் கறுப்புக் காகிதத்தை, சிறப்பு ஃபார்முலா மூலம் தயாரிக்கப்பட்ட திரவத்தில் போட்டால், அந்தக் கறுப்புக் காகிதம், ரூ.2,000 நோட்டாக மாறும்’ எனக் கூறியிருக்கிறார் நல்லமலை.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த போலீஸார், நல்லமலையிடம் மேலும் விசாரித்திருக்கிறார்கள். `என்னிடம் வரும் நபர்களிடம், நான் ஏற்கெனவே கறுப்பு மை தடவி வைத்திருக்கும் சில ஒரிஜினல் ரூபாய் நோட்டுகளை அவர்கள் முன், திரவத்தில் போட்டுக் காண்பிப்பேன். அந்த நோட்டுகளின் கறுப்பு மை கரைந்து பளிச்சிடும். அதைவைத்தே, வெற்று கறுப்புக் காகிதத்தை அந்த நபர்களிடம் விற்றுவிடுவேன்’ எனக் கூறியிருக்கிறார்.
யாரையோ ஏமாற்ற காரில் சென்றுகொண்டிருந்தார் நல்லமலை. வழியில் எங்களிடம் மாட்டிக்கொண்டார். அவரின் கறுப்புக் காகிதம், திரவம், கார் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. நல்லமலையைக் கைது செய்திருக்கிறோம். அவர் மீது தேனி, திருநெல்வேலி மாவட்டங்களில் கள்ளத்துப்பாக்கி வைத்திருந்தது மற்றும் பல்வேறு மோசடி வழக்குகள் இருப்பதாகத் தகவல் கிடைத்திருக்கிறது. எனவே, நல்லமலை பற்றிய முழுத் தகவல்களையும் விசாரித்துவருகிறோம். இது போன்ற மோசடி நபர்களிடம் சிக்கி மக்கள் தங்கள் பணத்தை இழக்க வேண்டாம்” என்றனர் வத்தலக்குண்டு போலீஸார்.