புதன்கிழமை இன்று செங்கோட்டை ரயில் பயணிகள் நலச்சங்க தலைவர் முரளி, செயலர் கிருஷ்ணன், மக்கள் ஊடகங்கள் தொடர்பாளர் ராமன் ஆகியோர் இன்று செங்கோட்டை ரயில் நிலையத்தில் புனலூர் – செங்கோட்டை – தென்காசி – பாவூர்சத்திரம் அம்பாசமுத்திரம் – திருநெல்வேலி வழித்தட ஆய்விற்காக புனலூரிலிருந்து சிறப்பு ரயிலில் வந்த தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸிடம் செங்கோட்டை தென்காசி வட்டார ரயில் நல கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர். அதைப் பெற்றுக் கொண்ட தெற்கு ரயில்வே பொது மேலாளரும் ஆவன செய்வதாகக் கூறினார்.
செங்கோட்டை ரயில் பயணிகள் நலச் சங்கம் சார்பில் அளிக்கப் பட்ட மனுவில் இடம்பெற்ற கோரிக்கைகள்…
1) பாலக்காடு திருநெல்வேலி பாலருவி எக்ஸ்பிரஸ் தற்போது செங்கோட்டையில் நிற்பதில்லை. இதனால் கேரளா செல்ல திட்டமிடும் செங்கோட்டை வட்டார பயணிகள் மிகவும் சிரமப் படுகின்றனர். எனவே இந்த ரயிலுக்கு செங்கோட்டை நிறுத்தம் வேண்டும்.
2) 03/02/21 முதல் ஓடிக் கொண்டிருக்கும் குருவாயூர் – புனலூர் விரைவு ரயிலை செங்கோட்டை தென்காசி ராஜபாளையம் விருதுநகர் வழி மதுரை வரை நீட்டிக்க வேண்டும். இந்த குருவாயூர் மதுரை ரயிலை ஏற்கெனவே ரயில்வே கால அட்டவணை கமிட்டி 2020ம் ஆண்டில் பரிந்துரை செய்துள்ளது.
3) சென்னை கொல்லம் தினசரி எக்ஸ்பிரஸ் சென்னையிலிருந்து மாலை 6.30க்கு புறப்படுமாறும் கொல்லம் சென்னை தினசரி எக்ஸ்பிரஸ் கொல்லத்திலிருந்து மாலை 5 மணிக்கும் புறப்படுமாறும் நேரங்கள் மாற்றம் செய்யப்பட வேண்டும். இதனால் விருதுநகர் ராஜபாளையம் தென்காசி செங்கோட்டை புனலூர் கொல்லம் பகுதிகளில் வாழும் ரயில் பயணிகள் பயன் அடைவார்கள். தற்போதைய நேரங்கள் வசதியாக இல்லை.
நடுஇரவு பயணமாக அமைவதால் பயணிகளுக்கு பலனில்லை.
4) கண்ணாடி மேற்கூரை வசதி உள்ள விஸ்டாடோம் பெட்டிகள் இணைக்கப்பட்ட சிறிய சுற்றுலா ரயில் வார இறுதி நாட்களில் தென்காசி புனலூர் இடையே இயக்கப்பட வேண்டும்.
5) கொரோனா தொற்றால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள புனலூர் செங்கோட்டை வழியாக இயங்கிய வாராந்திர எர்ணாகுளம் – வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் ரயில் தினசரி ரயிலாக மீண்டும் இயக்கப்பட வேண்டும்.
6) கொரொனா தொற்றால் ஓடாமல் இருக்கும் செங்கோட்டை – மதுரை பாசஞ்சர், செங்கோட்டை – திருநெல்வேலி பாசஞ்சர் ,
செங்கோட்டை – கொல்லம் பாசஞ்சர் ரயில்களை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
7) வாரத்தில் சில நாட்கள் திருநெல்வேயில் நிறுத்தி வைக்கப்படும் பிலாஸ்பூர், தாதர் விரைவு ரயில்களின் காலி பெட்டிகளை வைத்து
திருநெல்வேலியிலிருந்து அம்பை தென்காசி ராஜபாளையம் விருதுநகர் வழியாக வாரம் ஒரு முறை கோயம்புத்தூர், பெங்களூர், சென்னை நகரங்களுக்கு விரைவு ரயில்கள் விட வேண்டும்.
8) தற்போது செங்கோட்டையிலிருந்து சென்னைக்கு வாரம் மூன்று நாட்கள் இயக்கப்படும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் தினசரி இயங்க ஆணை பிறப்பிக்க வேண்டும்.
9) செங்கோட்டையிலிருந்து சென்னை செல்லும் பொதிகை ரயில்கள் சென்னை மாம்பலம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல ஆவன செய்ய வேண்டும்.
10) ஏற்கெனவே இருமுறை ரயில்வே அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்ட ஆனால் இன்றளவும் இயக்கப்படாத செங்கோட்டை தாம்பரம் பகல் நேர அந்தியோதயா விரைவு ரயில்களை விரைவில் இயக்க வேண்டும்.
11) திருவனந்தபுரத்திலிருந்து கொல்லம் புனலூர்,
செங்கோட்டை தென்காசி, ராஜபாளையம் விருதுநகர் வழியாக கோயம்புத்தூர், ராமேஸ்வரம், பெங்களூர், திருப்பதி, ஹைதராபாத், தில்லி இவற்றுக்கு எக்ஸ்பிரஸ் ரயில்கள் விட வேண்டும்.
இதுவரை புனலூர் – செங்கோட்டை வழித்தடம் மின்மயமாதல் பற்றி எந்த ஒரு ஆணையும் ரயில்வே அமைச்சகத்தால் வெளியிடப்படவில்லை. ஆனால் கொல்லம் – புனலூர்,
செங்கோட்டை – விருதுநகர் மற்றும் தென்காசி – திருநெல்வேலி வழித்தட மின்மயமாக்கலுக்கான ஆணை பிறப்பிக்கப்பட்டு பணிகளும் தொடங்கி 2022 டிசம்பருக்குள் முடிய உள்ளது.
எனவே ரயில்வே அமைச்சகம் விரைந்து நடவடிக்கை எடுத்து புனலூர் – செங்கோட்டை பாதை மின்மயமாக்கலை விரைந்து முடித்திட ஆணையும் தேவையான நிதி ஒதுக்கீடும் செய்ய வேண்டும்.
-என்பன அடங்கிய கோரிக்கைகள் அளிக்கப் பட்டுள்ளன.