உடல் நலம் சரியில்லாத தன் மனைவிக்கு, காதலர் தின பரிசாக தனது சிறுநீரகத்தை தானமாக அளித்திருக்கிறார் அவரது அன்பு கணவர். இவருக்கு நெட்டிசன்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
காதலர் தினத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக தங்கள் காதலர்களுக்கு கிப்ட் அளித்து அவர்களை மகிழ்ச்சி கடலில் மூழ்கடிப்பர். தங்களது காதலையும், இணை மீது கொண்ட அன்பையில் தான் அளிக்கப்போகும் கிப்ட், வெளிப்படுத்த வேண்டும் என தேடித்தேடி வாங்குவர். ஆனால் குஜராத்தை சேர்ந்த ஒருவர் தனது காதல் மனைவிக்கு அளித்த கிப்ட் குறித்து தான் ஊரெல்லாம் பேச்சாக இருக்கிறது.
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தை சேர்ந்தவர் வினோத் படேல். இவரது மனை ரீட்டா பென் படேலுக்கு கடந்த 3 ஆண்டுகளாக சிறுநீரக பிரச்சினை இருந்து வந்திருக்கிறது.
கடந்த மாதம் முதல் அவருக்கு டயாலிசிஸ் செய்யப்பட்டும் வந்திருக்கிறது. கிட்னி செயலிழந்த காரணத்தால், மாதத்திற்கு 3 முறை டயாலிசிஸ் செய்ய வேண்டும் என தெரிவித்த டாக்டர்கள், அவருக்கு உடனடியாக மாற்று சிறுநீரகம் பொருத்த வேண்டும் எனவும் தெரிவித்திருக்கின்றனர்.
தன் மனைவி நோயால் வாடுவதை கண்ட வினோத், அவருக்காக தனது சிறுநீரகத்தை தானமாக வழங்க முன்வந்திருக்கிறார். காதலர் தினத்தில் இதனை அவர் தன் மனைவியிடமும் தெரிவித்துவிட்டார். இதனையடுத்து ஆமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில், கிட்னி மாற்று அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது.
இதுகுறித்து வினோத் கூறுகையில், ”என் வாழ்க்கையின் இன்ப துன்பங்கள், கஷ்ட நஷ்டங்கள் என அனைத்திலும் அவர் என்னுடன் இருந்திருக்கிறார். நோயுடன் அவரை தனியாக போராட வைக்க விரும்பவில்லை. நானே என் சிறுநீரகத்தை தானமாக அளிக்கிறேன்’ என்றார். இந்த அன்பு தம்பதிகளுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.