தமிழ் திரை உலகின் முன்னணி நட்சத்திரமாக விளங்குபவர் நடிகர் அஜித். இவர் நடிப்பு மட்டுமின்றி பைக் ரேஸ், கார் ரேஸ், போட்டோகிராபி, ஆளில்லா சிறிய ரக விமானம் தயாரித்தல், கல்லூரி மாணவர்களுக்கு ட்ரோன் பயிற்சி அளிப்பது போன்ற செயல்களில் ஆர்வமாக செயல்பட்டு வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே.
அந்த வகையில் அவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை ரைஃபிள் கிளப்பில் துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்று வருகிறார். எழும்பூர் பழைய காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள சென்னை ரைஃபிள் கிளப் உறுப்பினரான அஜித் அவ்வப்போது துப்பாக்கி சுடும் பயிற்சிக்காக அங்குவந்து பயிற்சியை முடித்துவிட்டு செல்வதும் வாடிக்கையான ஒன்று.
இந்த நிலையில் துப்பாக்கி சுடும் பயிற்சிக்காக எழும்பூரில் உள்ள பழைய காவல் ஆணையர் அலுவலகத்திற்கு பதிலாக வழிமாறி வேப்பேரியில் உள்ள புதிய காவல் ஆணையத்திற்கு இன்று காலை நடிகர் அஜித் வந்திருந்தார். பின்னர் துப்பாக்கி பயிற்சி மேற்கொள்ள பயன்படுத்தபடும் கருவிகள் அடங்கிய பேக்கை எடுத்து தயாரானபோதுதான் வந்திருப்பது நடிகர் அஜித் என காவலர்களுக்கு தெரியவந்தது.
திடீரென நடிகர் அஜித் காவல் ஆணையர் அலுவலகத்துக்கு வந்ததால் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் திக்குமுக்காடி பின்னர் சுதாரித்து அவருடன் செல்பி எடுத்துக் கொண்ட சம்பவமும் அரங்கேறியது. பின்னர் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் பழைய காவல் ஆணையர் அலுவலகத்தில் இயங்கிவரும் சென்னை ரைஃபிள் கிளப் செல்வதற்கு வழி கூறிய, பின் நடிகர் அஜித் தான் வந்திருந்த காரில் புறப்பட்டு சென்னை ரைஃபிள் கிளப்பிற்கு சென்றார்.
நடிகர் அஜித் வழிமாறி வந்ததற்கு காரணம் என்ன என்பது பற்றி விசாரிக்கையில், அவர் தனது சொந்த வாகனத்தில் வராமல் கால் டாக்ஸி வாகனத்தில் (ஷிஃப்ட் டிசையர்) காரில் புக் செய்து வந்திருப்பது தெரியவந்தது. மேலும் வீட்டிலிருந்து கிளம்பும்போது கால் டாக்ஸி ஓட்டுனரிடம் கமிஷனர் அலுவலகம் செல்ல வேண்டும் என்று கூறியதால் அதற்கு ஏற்றபடி கால் டாக்ஸி ஓட்டுனரும் கூகுள் மேப்பில் கமிஷனர் அலுவலகத்தை குறிப்பிட்டுள்ளார். இதனால் கூகுள் மேப் புதிய கமிஷனர் அலுவலகத்தை கணக்கில் கொண்டு அதற்கேற்றவாறு வழிகாட்டியுள்ளது.
அதனால் வழி மாறி எழும்பூரில் உள்ள பழைய காவல் ஆணையர் அலுவககத்துக்கு செல்லாமல் புதிய காவல் ஆணையர் அலுவலகத்துக்கு நடிகர் அஜித் வந்ததும் தெரியவந்தது