அமெரிக்கா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா அனுப்பிய பெர்சிவரன்ஸ் விண்கலம் செவ்வாய் கிரகத்தில் இன்று வெற்றிகரமாக தரை இறங்கியது.
விண்கலத்தில் இருந்து செவ்வாயில் கால் பதித்த ரோபோட்டிக் ரோவர், செவ்வாயை படம்பிடித்து, முதல் புகைப்படத்தை நாசாவுக்கு அனுப்பிவைத்தது.
இந்த ரோபோட்டிக் ரோவர் செவ்வாய் கிரகத்தில் 5 மைல் தூரம் மாதிரிகள் சேகரித்து 2030-ம் ஆண்டில் பூமிக்கு திரும்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா, சீனா, ரஷ்யா, இந்தியா உள்பட பல்வேறு உலக நாடுகள் விண்வெளியில் தங்கள் ஆதிக்கத்தை நிலை நிறுத்த வேண்டும் என்பதில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
அந்த வகையில் பூமி போன்று உயிர்கள் வாழ ஏற்றதாக கருதும் செவ்வாய் கிரகத்தை தங்கள் இலக்காக வைத்துள்ளன. இதனால்தான் செவ்வாய் கிரகத்துக்கு ஒவ்வொரு நாடும் போட்டி போட்டு விண்கலங்களை அனுப்பி வருகின்றன.
அந்த வகையில் அமெரிக்கா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்கான அதிநவீன தொழில்நுட்பங்கள் அடங்கிய பெர்சிவரன்ஸ் என்ற ஆய்வு விண்கலத்தை கடந்த ஆண்டு ஜூலை மாதம் விண்ணில் செலுத்தியது. செவ்வாயில் உயிரினங்கள் வாழ்வது சாத்தியமா? என்ற ஆய்வுக்காக பிரத்யேகமாக இந்த விண்கலம் வடிவமைக்கப்பட்டது. சுமார் 7 மாத பயணம் தொடர்ந்த பெர்சிவரன்ஸ் செவ்வாய்கிரகத்தை அடைந்து சுற்றுவட்டபாதையில் சுற்றி வந்தது.
இந்த நிலையில் பெர்சிவரன்ஸ் விண்கலத்தில் இருந்து ரோபோட்டிக் ரோவர் செவ்வாய் கிரகத்தின் ஜெசிரோ பள்ளத்தில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை 2.30 மணி அளவில் தரையிறங்கியது. 7 நிமிடங்களில் தரை இறங்கிய ரோபோட்டிக் ரோவரை சாஃப்ட் லேண்டிங் முறையில் பாராசூட்டை பயன்படுத்தி விஞ்ஞானிகள் தரையிறக்கினர். அதன்பின்னர் ரோபோட்டிக் ரோவர் தனது கடமையை செய்ய தொடங்கியது. செவ்வாயை படம்பிடித்து, முதல் புகைப்படத்தை நாசாவுக்கு அனுப்பிவைத்தது. ரோபோட்டிக் ரோவர் செவ்வாயில் தரையிறங்கியதும் நாசா விஞ்ஞானிகள் கைத்தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
செவ்வாயில் தரை இறங்கிய ரோபோட்டிக் ரோவர் ஒரு டன் எடை கொண்டது. இதில் இரண்டு மீட்டர் கொண்ட இரு ரோபோ கரங்களும், 19 கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. இந்த ரோபோட்டிக் ரோவர் செவ்வாய் கிரகத்தில் 5 மைல் தூரம் மாதிரிகள் சேகரித்து 2030-ம் ஆண்டில் பூமிக்கு திரும்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இத்துடன் குட்டி ஹெலிகாப்டர் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது வெற்றிகரமாக செவ்வாயில் பறந்தால், பூமிக்கு வெளியே ஹெலிகாப்டரை பறக்க செய்த சாதனையை நாசா படைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Touchdown confirmed. The #CountdownToMars is complete, but the mission is just beginning. pic.twitter.com/UvOyXQhhN9
— NASA (@NASA) February 18, 2021