ரிசர்வ் வங்கி சமீப காலங்களில் பல்வேறு வங்கிகளுக்கு பல புதிய கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.
மேலும் புதிய உத்தரவுகளையும் பிறப்பித்து வருகிறது. அந்த வகையில், கர்நாடாகவை சேர்ந்த டெக்கான் அர்பன் என்ற கூட்டுறவு வங்கிக்கு பல புதிய கட்டுப்பாடுகளை ரிசர்வ வங்கி விதித்துள்ளது. இந்த கூட்டறவு வங்கி புதிய கடன்களை வழங்க தடை விதிக்கப்படுவதாக ரிசர்வ வங்கி அறிவித்துள்ளது.
மேலும் வங்கியின் தற்போதைய நிதி நிலையை கருத்தில் கொண்டு வாடிக்கையாளர்கள் தங்கள் சேமிப்பு கணக்கில் இருந்து ரூ.1000-க்கு மேல் பணத்தை திரும்ப பெற முடியாது என்றும், இது அனைத்து வகையான கணக்கு வைத்திருப்பவர்களுக்கு பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 மாதங்களுக்கு இந்த உத்தரவு அமலில் இருக்கும் என்று தெரிவித்துள்ள ரிசர்வ் வங்கி, எந்தவொரு புதிய முதலீடும் அல்லது புதிய பொறுப்பும் முன் அனுமதியின்றி எடுக்கப்படக் கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நிதி நிலைமை சரியாகும் வரை, வங்கி முன்பு போலவே இயங்கும் என்றாலும், இந்த அறிவுறுத்தல்கள் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணை நோக்கத்திற்காக டெக்கான் அர்பன் கூட்டுறவு வங்கி தடை செய்யப்பாட்டாலும், வங்கியின் உரிமம் ரத்து செய்யப்படவில்லை. எனவே வாடிக்கையாளர்களின் பணம் முற்றிலும் பாதுகாப்பாக இருக்கும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மேலும் வாடிக்கையாளர்களின் பணத்திற்கு காப்பீட்டு உறுதி வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.