சென்னையில் அடையார், துணை கமிஷனர் விக்ரமனை சந்தித்து சைதாப்பேட்டையை சேர்ந்த 40 வயதுடைய பெண் ஒருவர், புகார் மனு ஒன்றை அளித்திருந்தார்.
அவர் அளித்த மனுவில் “எனக்கு திருமணமாகி 13 வயதில் குழந்தை ஒன்று உள்ளது. எனக்கும் எனது கணவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சமீபத்தில் நான் அவரை விவாகரத்து செய்துவிட்டேன்.
நான் மறுமணம் செய்து கொள்ள முடிவு செய்தேன் அதனால் பிரபல திருமண தகவல் மையம் ஒன்றில் பதிவு செய்திருந்தேன். அதன் மூலம் 45 வயதான மனோகரன் என்பவர் அறிமுகம் ஆனார். அவர் ஆந்திரா மாநிலத்தை சேர்ந்தவர். அவர் தான் ஒரு தொழில் அதிபர் என்றும், தனக்கும் விவாகரத்து ஆகிவிட்டது என்றும் என்னிடம் அறிமுகம் ஆனார்.
நான் அவரை திருமணம் செய்ய விரும்பினேன். அவரும் என்னை திருமணம் செய்ய ஒப்புக்கொண்டார். பின்னர் இருவரும் நன்றாக பழகி வந்தோம். நான் அவருக்கு செல்போன் உள்பட பல விலையுயர்ந்த பொருட்களை பரிசாக கொடுத்தேன்.
திடீரென ஒரு நாள் அவர் எனக்கு மருத்துவ செலவுக்கு ரூ.10 லட்சம் வேண்டும் என்று கேட்டார். நானும் உடனே என்னிடம் இருந்த ரூ.10 லட்சத்தை அவர் கூறிய வங்கி கணக்குக்கு அனுப்பினேன். ஆனால் அதன்பின்னர் அவரை தொடர்புக்கொள்ள முடியவில்லை.
அப்போது தான் நான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தேன். எனவே என்னை திருமணம் செய்துக்கொள்வதாக கூறி மோசடியில் ஈடுபட்ட மனோகரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த புகார் மனுவின் மீது சைதாப்பேட்டை ‘சைபர் கிரைம்’ போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மனோகரனின் செல்போன் எண்ணை வைத்து ஆராய்ந்ததில், அவர் ஐதராபாத்தில் இருப்பது தெரியவந்தது. அதனால் சைதாப்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் காணிக்கைராஜ் தலைமையிலான தனிப்படை அமைக்க பட்டு போலீசார் மனோகரனை ஐதராபாத் சென்று கைது செய்தனர்.
கைது செய்ய பட்ட மனோகரனை விசாரித்ததில் அவர், திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் ஆந்திரா மாநிலம் சித்தூர் வசித்து வருவதாகவும், தன்னை தொழில் அதிபர் என்றுக்கூறி பல பெண்களை திருமணம் செய்துக் கொள்வதாக ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.