அரூர் அருகே பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்துக்கொண்டிருந்த 5 பேர் மீது கார் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழந்தனர்.
தருமபுரி மாவட்டம், அரூர் அடுத்த எஸ்.பட்டி கிராமத்தில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் ஊத்தங்கரை செல்வதற்காக பேருந்துக்கு பயணிகள் நின்று கொண்டிருந்தனர். அப்போது சேலத்தில் இருந்து சென்னை நோக்கி அதிவேகமாக வந்த கார், நின்று கொண்டிருந்த பயணிகள் மீது மோதியதில் இருவர் பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மூன்று பேரை அவசர சிகிச்சைக்காக அரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் இருவருக்கு முதலுதவி செய்து மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றனர்.
விபத்து நடைபெற்ற இடத்திற்கு நேரத்திற்கு வராததாலும், சேலம் அயோதியபட்டனம் முதல் வாணியம்பாடி வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலை தற்போது அமைக்கப்பட்டு வருவதால் சாலையின் நடுவில் ஆங்காங்கே ஜல்லி கற்களை கொட்டி வைத்துள்ளனர்.
இந்த பணி மெத்தனமாக நடைபெற்று வருவதால் இதுபோன்ற விபத்துக்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. எனவே இந்த தேசிய நெடுஞ்சாலையை அமைக்கும் பணி என்பது விரைவாக செயல்படுத்தி இத்திட்டத்தை முடிக்க வேண்டும் எனவும் இன்றைக்கு விபத்து பகுதிகளில் எச்சரிக்கை பலகைகளை அமைக்க வேண்டும் எனவும், 108 ஆம்புலன்ஸ் அரூர் நகர பகுதிக்கு மிகவும் குறைவாக உள்ளதால் இதுபோன்ற விபத்துகளில் உயிரிழப்புகள் அதிகளவில் ஏற்படுகின்றன எனவே 108 ஆம்புலன்ஸ் வாகனங்களில் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்து பொதுமக்கள் அரூர் ஊத்தங்கரை சாலையில் கற்கலை வைத்து தொடர்ந்து 4 மணி நேரமாக சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து முழுவதும் துண்டிக்கப்பட்டது.
இந்த விபத்தில் கருத்தம்பட்டி பகுதியை சேர்ந்த 12 வயது பள்ளி மாணவன் ஸ்ரீநாத், எஸ்.பட்டி கிராமத்தைச் சேர்ந்த வெண்மணி, சிவலட்சுமி ஆகியோர் உயிரிழந்தனர்.
தங்கமணி, புஷ்பா ஆகியோர் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இந்த விபத்தை ஏற்படுத்திய திருவண்ணாமலை மாவட்டம் சேத்துபட்டை சேர்த்து இருவர் கைது. மேலும் அப்பகுதியில் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கலைத்தனர்.