ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த திலீப் என்பவர் சென்னை கோயம்பேட்டில் தங்கி டைல்ஸ் கடையில் வேலை பார்க்கிறார். இவர் கடந்த 2020 டிசம்பரில் புதிதாக பைக் வாங்கி பூஜை போட்டு வீட்டின் முன்பு நிறுத்தியுள்ளார். காலையில் பைக்கை காணவில்லை. இதுகுறித்து கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இதேபோல கோயம்பேடு, நெற்குன்றம், மதுரவாயல், பூந்தமல்லி பகுதிகளில் வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டிருந்த குறிப்பிட்ட மாடல் பைக்குகள் மட்டும் காணாமல் போவதாக தொடர் புகார்கள் வந்தன.
இதையடுத்து, கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆராய்ந்தபோது, பைக்குகளை 2 பேர் திருடிச் செல்வது தெரிந்தது.
அதில் ஒருவர் பழைய குற்றவாளியான வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சின்ன பள்ளிகுப்பம் பகுதியை சேர்ந்த யுவராஜ் என்பதுதெரிந்தது. அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். அவரிடம் இருந்து 25 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.
யுவராஜும் அவரது கூட்டாளி சரத்பாபுவும் சேர்ந்து வேலூரில் இருந்து பேருந்து மூலம் சென்னைகோயம்பேடு வந்து குடியிருப்பு பகுதிகளிலும் சாலையோரமாகவும் நிறுத்தப்பட்டிருக்கும் குறிப்பிட்ட மாடல் பைக்கை மட்டும் திருடிச் சென்று வேலூர் அடுத்த குடியாத்தம் பகுதிகளில் ரூ.8 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை விற்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவ்வாறு திருட்டு பைக்குகளை விற்றே குடியாத்தம் பகுதிகளில் 2 ஏக்கரில் நிலம் வாங்கி, புதிதாகவீடு ஒன்றை யுவராஜ் கட்டி வருவதாக போலீஸார் தெரிவித்தனர். சரத்பாபுவிடம் இதுபோல 40 திருட்டு வாகனங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. போலீஸார் அவரை தேடி வருகின்றனர்.