மதுரை: மதுரை காமராஜர் சாலை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 73 வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது குறித்து மதுரை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ பங்கேற்று பேசினார்.
இக்கூட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிமுக மகளிரணியினர், ஐநூறுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த நிலையில், கூட்டம் முடிந்த பிறகு அதிமுகவினர்க்கு இரவு உணவாக பிரியாணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதிமுகவினர் வரிசையாக நின்று பிரியாணியை பெற்று தரையில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தனர்.
கட்சி நிர்வாகிகளும் பிரமுகர்களும் சாப்பிடும் இடத்திற்கு நேரில் சென்ற அமைச்சர் செல்லூர் ராஜூ திடீரென்று மக்களோடு மக்களாக வரிசையில் நின்று பாக்குமட்டை தட்டை வாங்கி அதிமுகவினரோடு வரிசையில் நின்று பிரியாணியை வாங்கி சாப்பிட்டார்.
தொடர்ந்து நின்ற படியே பிரியாணியை சாப்பிட்ட அமைச்சர் செல்லூர் ராஜூ தரையில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்த பெண் தொண்டர்களிடம் நலம் விசாரித்ததோடு, பிரியாணி நன்றாக உள்ளதா எனவும், நிறைய வாங்கி சாப்பிடுங்கள் எனவும் கூறினார்.
அதிமுக தொண்டர்களோடு அமைச்சர் செல்லூர் ராஜூ ஒன்றாக இணைந்து அவர்களுக்கு பரிமாறப்பட்ட உணவை அமைச்சரும் வாங்கி அவர்களோடு சேர்ந்து உணவருந்தியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.