புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர். கிருஷ்ணசாமி, தேவேந்திர குலவேளார் சமுதாயத்தை பட்டியல் சமூகத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று தொடர்ந்து போராட்டம், ஆர்பாட்டம், கோரிக்கை, என்று மத்திய, மாநில அரசுகளுக்கு தங்களது கருத்தை வலியுறுத்தி வந்தார்.
தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தின் நீண்ட நாள் கோரிக்கையை விரைவில் நிறைவேற்றுவேன் என்று பாரதப் பிரதமர் மோடி அண்மையில் உறுதி அளித்திருந்தார். இதனை மேற்கோள் காட்டி டாக்டர் கிருஷ்ணசாமி தனது கட்சி தொண்டர்களிடம், நாம் இந்து மதத்தில் பிறந்தது பெரும் பாக்கியம், எக்காரணத்தை முன்னிட்டும் நாம் மத மாறக் கூடாது என்று கூறி சத்தியம் வாங்கியுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் புதிய தமிழகம் கட்சியின் பொதுக்கூட்டம் ஒன்று அண்மையில் நடைபெற்றது. இந்தப் பொதுக் கூட்டத்தில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கட்சித் தொண்டர்களிடம் பேசியபோது …
நாம் இந்துக்கள் என்பதை மறந்துவிடக்கூடாது உலகின் முன்னோடியான பழமையான மதம் இந்து மதம்! இந்த மதத்தில் பிறந்ததற்காக கடவுளுக்கு நாம் நன்றி செலுத்த வேண்டும்!
ஏழு சாதிகளை உள்ளடக்கிய தேவேந்திர குல வேளாளர் பட்டியல் இனத்தில் இருந்ததால் ஒரு சிலர் மட்டுமே பயன் அடைந்தனர். ஒட்டுமொத்தமாக பயன் அடைய வில்லை. பட்டியல் இனத்தில் இருந்ததால் தாழ்வு மனப்பான்மையுடன் பலர் இருந்தனர். இதனால் வேறு மதங்களுக்கும் மாறினர்.
நாம் பட்டியல் இனத்தில் இருந்து விடுபட்டு உள்ளதால் நமக்கு இப்போது தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. ஆம் நாம் இந்துக்கள் என்பதை மறந்துவிடக்கூடாது. இனி நம் இனத்தவர் ஒருவர் கூட பிற மதத்திற்கு செல்லக்கூடாது என்பதில் உறுதியுடனும் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டும் அதை கடைசி மூச்சு உள்ளவரை பின்பற்ற வேண்டும்.
நாம் இனி ஹிந்து. இதை சிலர் ஏற்காவிட்டாலும் கவலைப்படாதீர்கள்… இழிவாக பேசினாலும் பொறுத்துக்கொள்ளுங்கள். வம்புக்கு இழுத்தால் பொறுமை காக்க வேண்டும். அவர்களுடன் சரிக்குச் சரியாக சண்டை போடக்கூடாது. இந்த நிலை காலப்போக்கில் சரியாகிவிடும்… என்று பேசினார்