வாட்ஸ் ஆப்பின் புதிய அப்டேட் கொள்கையை ஏற்றுக்கொள்ளாத பயனர்களின் கணக்குகள் நீக்கப்படும் என அந்நிறுவனம் மீண்டும் எச்சரித்துள்ளது.
வாட்ஸ் ஆப் நிறுவனம், தனது சேவை விதிமுறைகள் மற்றும் தனியுரிமைக் கொள்கையில் மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. இது குறித்த தகவல்களை தனது பயனர்களுக்கு அறிவிப்புகள் மூலம் அனுப்பத் தொடங்கியுள்ளது.
ஃபேஸ்புக் வழங்கும் பிற தயாரிப்புகள் மற்றும் சேவைகளுடன், வாட்ஸ் ஆப்பை ஒருங்கிணைக்க இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. வாட்ஸ் ஆப்பின் இந்த புதிய கொள்கையால் தனிநபர்களின் தகவல்கள் அவர்கள் அனுமதியின்றி பிற சமூக வலைதளங்களில் வெளியாகலாம் என நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்தது.
இதையடுத்து, கடந்த 8-ம் தேதி புதிய கொள்கையை நடைமுறைக்கு கொண்டுவர இருந்த வாட்ஸ் ஆப் நிறுவனம், அந்த முடிவை, வரும் மே 15-ம் தேதி வரை ஒத்தி வைத்துள்ளது.
இந்நிலையில், தனது புதிய கொள்கையை வரும் மே 15-ம் தேதிக்குள், பயனாளர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், ஏற்றுக்கொள்ளாத பயனர்களின் கணக்குகள் நீக்கப்படும் என்றும் வாட்ஸ் ஆப் நிறுவனம் எச்சரித்துள்ளது.
அதேநேரம், பயனாளர்களின் தனிமனித தகவல்கள் பாதுகாப்பாக வைக்கப்படுவது தொடர்ந்து உறுதி செய்யப்படும் என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது.