மதுரை மாவட்டம் டி. குன்னத்தூரில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாளை முன்னிட்டு ஜெ. பேரவை சார்பில் 501 புதிய பானைகளில் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடும், சிலைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்து அதனைத் தொடர்ந்து 7,300 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஜெ.சிலைக்கு மலர் தூவி மரியாதை செய்து,நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ஆர் பி உதயகுமார் வழங்கினார்.
அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசியதாவது,
பல்வேறு துறைகளில் முதல் இடத்தில் இருக்கும் தமிழக அரசு நிதி மேலாண்மை முதலிடத்தில் உள்ளது. அதே போல் கடன் சுமையும் கட்டுக்குள் உள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் 7,000 கோடிக்கு மேல் பயிர் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதில் 33 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பயன் பெற்றனர்.
பேரிடர் காலங்களில் விவசாய மக்களுக்காக சில விதியை தளர்த்தி மானாவாரி ஒரு ஏக்கருக்கு 10 ஆயிரம் ரூபாய் உதவியும், நீண்டகால பயிர்களுக்கு ஒரு ஏக்கர் 25,000 ரூபாய் உதவியும் முதலமைச்சர் வழங்கியுள்ளார்.
நீர் மேலாண்மையில் முதலிடத்தை பிடித்து இருக்கிறோம்.
தேர்தல் வந்த உடன் யார் வேண்டுமானாலும் முதலமைச்சர் ஆகலாம் என்று கனவு காணலாம் ஆனால் அதற்கான ஒரு தகுதி வேண்டும்.4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக காணவேண்டிய வளர்ச்சிகளை தற்சமயம் செய்து முடித்துள்ளார் தமிழகத்தின் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.
110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட அனைத்து அறிவிப்புகளை 100% நிறைவேற்றியுள்ளோம்,தேர்தல் வாக்குறுதிகளை 100% நிறைவேற்றியுள்ளோம். அமைச்சர்கள் மானிய கோரிக்கையில் அறிவித்துள்ள திட்டங்களை நிறைவேற்றி கொடுத்திருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.
ஆட்சி அதிகார பசியோடு தற்சமயம் களத்தில் நின்று கொண்டிருக்கிறார் திமுக தலைவர் ஸ்டாலின் . முன்னாள் முதல்வர் கலைஞர் இருந்த பொழுது முதலமைச்சராக ஆகிவிட வேண்டும் என்று நினைத்தார். அதை மக்கள் விரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
2021 தமிழகத்தின் முதலமைச்சர் ஆக மாறிவிடலாம் என்று மு.க. ஸ்டாலின் நினைக்கிறார். ஆனால் அப்போது மக்கள் அதை விரும்ப மாட்டார்கள். அதனால் எப்போதும் ஸ்டாலின் முதலமைச்சர் ஆக முடியாது.
முதலமைச்சருக்கு மந்திரவாதி என்று பெயர் சூட்டியுள்ளார் ஸ்டாலின். முதலமைச்சருக்கு மந்திரமும் தந்திரமும் தெரியாது. ஆனால் மக்களின் தேவை அறிந்து உழைக்க தெரியும்.
ஒவ்வொரு பகுதியாக செல்கிறார் ஸ்டாலின் அவர் சொல்கிற இடத்தில் கட்சியின் உறுப்பினர்களை சந்தித்து வருகிறார். ஆனால் தமிழகத்தின் முதலமைச்சர் பொதுமக்களை சந்தித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
2021 தேர்தலுக்கு பிறகு திமுக அழிந்து விடும் என்பதில் எந்தவித மாற்றமுமில்லை. தகுதி வாய்ந்த தலைவர் திமுகவில் இல்லை. தடுமாறும் தலைவர் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.ஆனால் தற்சமயம் நமக்கு உள்ள தலைவர் நிரந்தரமான எளிமையான தலைவர் என்பதில் மாற்றமில்லை.
கொங்கு நாடு, சோழநாடு கழகத்திற்கு வெற்றிக்கொடி நாட்டி வருவதைப்போல் பாண்டிய நாடும் வெற்றிக்கொடி நாட்டில் முதலிடத்தை பிடிக்கும் என்பது சாத்தியமாகும்.
மதுரை மாவட்டம் புறநகர் மேற்கு தொகுதியில் முழுநேர அரசு ஊழியர்கள் என்பது போல முழு நேர அரசியல் ஊழியர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
குறைந்தபட்ச ஊதியம் என்கிற அடிப்படையில் அவர்களது வாழ்வாதாரமான ஊதியம் வழங்கப்படும் என்பதில் மாற்றமில்லை.
இந்த இயக்கத்தில் நீண்ட நாட்கள் உழைத்துக் கொண்டிருக்கிற தகுதியானவர்களுக்கு இந்த அரசியல் ஊதியம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது எனத் தெரிவித்தார்.