பிப்ரவரி மாதத்தில் 3ஆவது முறையாக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது சிலிண்டர் விலை மேலும் 25 ரூபாய் உயர்ந்துள்ளதால் ஒரு சிலிண்டரின் விலை 785 ரூபாயில் இருந்து 810 ரூபாய் ஆக அதிகரித்துள்ளது.
சர்வதேச சந்தையின் கச்சா எண்ணெய் விலையின் மதிப்பை அடிப்படையாக வைத்து எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் டீசல் மட்டுமின்றி, சமையல் எரிவாயு சிலிண்டர் விலையையும் தீர்மானிக்கின்றன.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினசரி மாற்றியமைக்கப்படுகிறது. ஆனால் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை பொதுவாக மாதத்தில் முதல் மற்றும் பிற்பாதியில் மாற்றியமைக்கப்படும். சில சமயங்களில் இடையில் கூட மாற்றியமைக்கப்படும்.
அப்படித்தான் இப்போது பிப்ரவரி மாதத்தில் 3வது முறையாக சமையல் எரிவாயு சிலண்டர் விலை உயர்ந்துள்ளது.
கடந்த பிப்ரவரி 4ம்தேதி வீடுகளுக்கு வினியோகிக்கப்பட்ட 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக மானியமில்லாத சிலிண்டர் விலை ரூ.25 விலை அதிகரிக்கப்பட்டது. இதன் காரணமாக சென்னையில் மானியமில்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.735 ஆக உயர்ந்தது.
இந்நிலையில் கடந்த பிப்ரவரி 14ம் தேதி சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டது. இதனால் அதன் விலை 785 ரூபாய் ஆக உயர்ந்தது. இந்நிலையில் பிப்ரவரி மாதத்தில் 3ஆவது முறையாக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது சிலிண்டர் விலை மேலும் 25 ரூபாய் உயர்ந்துள்ளதால் ஒரு சிலிண்டரின் விலை 785 ரூபாயில் இருந்து 810 ரூபாய் ஆக அதிகரித்துள்ளது.
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை கடந்த ஜனவரி மாதம் விலை உயர்த்தப்படவில்லை. ஆனால் அதற்கு முன் டிசம்பரில் 100 ரூபாய் உயர்த்தப்பட்டது. இதனால் கடந்த டிசம்பரில் தொடங்கி பிப்ரவரி மாதத்திற்குள் 200 ரூபாய் உயர்ந்துள்ளது. அதாவது நவம்பர் இறுதியில் 610 ரூபாய் என்று இருந்த சிலிண்டர் விலை தற்போது 810 ஆக உயர்ந்துள்ளது.
பிப்ரவரி மாதத்தில் மட்டும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 100 ரூபாய் உயர்ந்துள்ளது. வணிக ரீதியாக பயன்படுத்தும் சிலிண்டர்களின் விலையும் இதே அளவிற்கு உயர்ந்துள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் மீண்டும் உயர்த்தப்படுவது பொதுமக்களிடையே கவலையை அதிகரித்துள்ளது. ஏற்கனவே பெட்ரோல் டீசல் விலையும் கடுமையாக உயர்வதால் மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள்.