Home உள்ளூர் செய்திகள் பிரதமர் வருகையால் கோவை அடைந்த பெருமை!

பிரதமர் வருகையால் கோவை அடைந்த பெருமை!

பிரதமர் மோடி வருகையால், கோவை விமான நிலையத்தில், ‘போயிங்’ நிறுவனத்தின் மிகப்பெரிய ஜம்போ விமானம் முதல் முதலாக தரையிறக்கப்பட்ட வரலாற்று நிகழ்வு, அரங்கேறியது.

தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கவும், வளர்ச்சித்திட்டங்களைத் துவக்கி வைக்கவும் பிரதமர் மோடி, கோவைக்கு வந்தார். அவர் சென்னையிலிருந்து பயணம் செய்து வந்த விமானம், கோவை விமான நிலையத்தில் நேற்று மாலை 3:20மணியளவில் தரையிறக்கப் பட்டது.

ஜம்போ’ ரக பெரிய விமானங்களை,கோவை விமான ஓடுதளத்தில் இறக்க முடியாது என்று நீண்டகாலமாக கூறப்பட்டு வந்த காரணம், பொய்யென நிரூபணமாகியுள்ளது. கோவை விமான நிலைய ஓடுதளம், 2,990 மீட்டர் (9810 அடி) நீளமுடையது.
அதாவது, 3 கி.மீ., துாரமுடையது. கோழிக்கோடு விமான நிலைய ஓடுதளத்தை விட, இது நீளமானது. ஆனால், அங்கு இறக்கப்படும் பெரிய விமானங்கள் கூட, இங்கு இயக்கப்படுவதில்லை.

பிரதமர் மோடி பயணம் செய்து வந்த, ‘ஏர் இந்தியா 1’ விமானம், இந்தியாவிலுள்ள மிகப்பெரிய விமானங்களில் ஒன்றாகும். இது நேற்று இங்கு தரையிறக்கப்பட்டதால், ஜம்போ ரக பெரிய விமானங்களையும் இங்கு இறக்க முடியும் என்பது உறுதியாகியுள்ளது.

பிரதமர் விமானத்தின் ஸ்பெஷல்இந்தியாவில் 70, 180, 250 இருக்கைகள் கொண்ட விமானங்கள் ஏர் இந்தியா மற்றும் தனியார் விமான நிறுவனங்களால் இயக்கப்படுகின்றன.
குறிப்பாக, 180 இருக்கைகள் கொண்ட விமானங்கள்தான் அதிகமாக இருக்கின்றன.

ஆனால், பிரதமர் மோடி வந்த ஜம்போ விமானம் (B777 300 ER-VT – ALW), 350 பேர் பயணம் செய்யக்கூடிய கொள்ளளவு கொண்டது. இதை ஏர் இந்தியா 1 விமானம் என்று அழைக்கிறார்கள். இந்தியாவில் இதுபோன்று இரண்டு விமானங்கள் மட்டுமே இருக்கின்றன. அமெரிக்காவின் ‘போயிங்’ நிறுவனம், ஏர் இந்தியா நிறுவனத்துக்காகத் தயாரித்த இந்த விமானங்களை மத்திய அரசே விலை கொடுத்து வாங்கியுள்ளது.

அதனால், இந்த விமானங்களில் ‘இந்தியா’ என்று மட்டுமே ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கும். ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகிய முக்கியத்தலைவர்களின் பயணங்களுக்காகப் பயன் படுத்தப்படுவதால், அமெரிக்காவின் சியாட்டில் நகரிலுள்ள, ‘போயிங்’ விமான நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டு, மேலும் பல கூடுதல் வசதிகள் இதில் செய்யப்பட்டுள்ளன.

இந்த விமானத்தின் நீளம் 250 அடி; சிறகுகளின் ஒரு முனையில் இருந்து மறுமுனை வரையிலான அகலம் மொத்தம் 215 அடி. விமானத்தின் மொத்த உயரம் 61 அடி. இந்த விமானத்தில் முழுமையாக பெட்ரோல் நிரப்பி விட்டால், 13 ஆயிரம் கி.மீ., துாரத்துக்கு இடையில் நிற்காமல் தொடர்ந்து, 15 மணி நேரம் பறக்கும்.

கோவை விமான நிலைய ஓடுதளத்தில் முதல் முறையாக ஜம்போ ரக பெரிய விமானம் இறக்கப்பட்டதை வரலாற்று நிகழ்வாக, கோவையின் தொழில் அமைப்பினர் கருதுகின்றனர். தற்போதுள்ள கோவை விமான நிலையம், 400 ஏக்கர் பரப்புடையது. இது மேலும் 618 ஏக்கர் பரப்பில் விரிவாக்கம் செய்யப்படும்போது, இந்த ரக விமானங்களை எளிதாக இறக்கும் வகையில் விமான நிலைய ஓடுதளத்தின் நீளத்தை 12 ஆயிரம் அடி அளவுக்கு நீட்டிக்க வேண்டும்.

விரிவாக்கப்பணிகள் முடிந்தால்தான், விமான முனையம், ஏப்ரான் எனப்படும் விமான நிறுத்துமிடம் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்த முடியும். அதற்குத்தான் விமான நிலைய விரிவாக்கப் பணிகளை விரைவு படுத்த வேண்டுமென்று தொழில் அமைப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version