சென்னை சர்வதேச திரைப்பட விழா நிறைவு பெற்றது. இதில் சிறந்தபடங்களாக ‘என்றாவது ஒரு நாள்’,’சியான்கள்’, ‘க/பெ.ரணசிங்கம்’ ஆகிய படங்கள் விருது பெற்றன.
18-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா கடந்த 18-ம் தேதி தொடங்கியது. இவ்விழாவில் 53 நாடுகளில் இருந்து 91 திரைப்படங்கள் திரையிடப்பட்டன. இவ் விழாவை இம்முறை பிவிஆர் உடன் இணைந்து இந்தோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் வழங்கியது.
இந்நிலையில், சென்னை சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சி நேற்று மாலை சத்யம் திரையரங்கில் நடந்தது. இதில் இந்தோ சினி அப்ரிஷியேஷன் பொதுச்செயலாளர், இ.தங்கராஜ், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபைத் தலைவர் காட்டகர பிரசாத், பேராசிரியர் ரங்கநாதன், விழாவின் நடுவர்களான நடிகை சுகன்யா, இயக்குநர் ஹலிதா ஷமீம், பத்திரிகையாளர் பரத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
நிறைவு விழா திரைப்படமாக ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த ‘ஐ வாஸ், ஐ ஆம், ஐ வில் பி’ திரைப்படம் திரையிடப்பட்டது.
இந்த திரைப்பட விழாவில் தமிழ்ப் படங்களுக்கான போட்டியில் ‘லேபர்’, ‘கல்தா’, ‘சூரரைப் போற்று’, ‘பொன்மகள் வந்தாள்’, ‘மழையில் நனைகிறேன்’, ‘மைநேம் இஸ் ஆனந்தன்’, ‘காட்ஃபாதர்’, ‘தி மஸ்கிட்டோ பிலாசபி’,’சீயான்கள்’, ‘என்றாவது ஒருநாள்'(சம் டே), ‘காளிதாஸ்’, ‘க/பெ ரணசிங்கம்’, ‘கன்னி மாடம்’ ஆகிய 13தமிழ் திரைப்படங்கள் பங்கேற்றன.
இதில் சிறந்த படமாக வெற்றிதுரைசாமி இயக்கி தயாரித்த ‘என்றாவது ஒரு நாள்’ (சம் டே) திரைப்படம் தேர்வு செய்யப்பட்டது. இப்படத்துக்கு முதல் பரிசாக ரூ.2 லட்சம் பரிசு வழங்கப்பட்டது. சிறந்த தயாரிப்புக்கான ரூ.1லட்சத்துக்கான பரிசையும் இப்படம் வென்றது. மேலும், படத்தின் ஒளிப்பதிவாளர் சண்முகசுந்தரம் சிறந்த ஒளிப்பதிவுக்கான விருதும், ரூ.1 லட்சம் பரிசும் பெற்றார்.
இரண்டாவது சிறந்த படமாக ‘சீயான்கள்’ திரைப்படம் தேர்வானது. இப்படத்தின் தயாரிப்பாளர் கரிகாலனும், இயக்குநர் வைகறைபாலனும் தலா ரூ.1 லட்சம் பரிசு பெற்றனர்.
இதைத் தவிர சிறந்த நடிப்பு பங்களிப்புக்காக ‘க/பெ ரணசிங்கம்’ படத்தில் நாயகியாக நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ் விருது பெற்றார்.