திருக்கோஷ்டியூர் மாசி மக தெப்பத் திருவிழாவிற்கு பக்தர்கள் குவிந்து வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக, சிறப்பு பேருந்துகளை போக்குவரத்து கழகம் இயக்கி வருகிறது.
சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூரில் அமைந்துள்ள அருள்மிகு சௌம்ய நாராயணப் பெருமாள் திருக்கோவிலில் நடைபெறும் மாசி மகத் தெப்பத் திருவிழாவில் சுற்றிலும் உள்ள மாவட்டங்களில் இருந்து பெருமளவில் பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் கோவிலில் இன்று நடைபெறக்கூடிய விழாவில் கலந்து கொள்வதற்காக ஏராளமான பொதுமக்கள் வந்து கொண்டிருக்கின்றனர்.
பொதுமக்களின் நலன் கருதி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சிறப்பு பேருந்துகளை மதுரையிலிருந்து இயக்கி வருகிறது. காலை 6 மணிக்கு தொடங்கிய பேருந்து சேவையில் தற்போது வரை 60 க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு உள்ளன.
மறு மார்க்கமாக திருக்கோஷ்டியூரில் இருந்து மதுரை வரை 50க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். இந்நிலையில் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் மூன்று நாள் போராட்டம் இன்று முடிவுக்கு வந்துவிட்டதாக தகவல் வெளியானது.