தடுப்பூசியின் செயல்திறன் குறித்து மக்கள்தொகையில் ஒரு பகுதியினர் சந்தேகத்தை வெளிப்படுத்தியுள்ள நிலையில், பிரதமர் கொரோனா தடுப்பூசியின் முதல் அளவைப் பெற்றபோது, செவிலியர்களுடன் அமைதியாகப் பேசுவதைக் காண முடிந்தது.
பிரதமர் மோடிக்கு தடுப்பூசி வழங்கிய புதுச்சேரியைச் சேர்ந்த நர்ஸ் பி நிவேதிதா, தடுப்பூசி பெற்ற பிறகு, பிரதமர், “இது ஏற்கனவே முடிந்துவிட்டதா? நான் கூட கவனிக்கவில்லை.” எனக் கூறியதாகத் தெரிவித்தார்.
மோடி இன்று தடுப்பூசி எடுத்துக்கொள்வது குறித்து முன்னதாக தகவல் எதுவும் வெளியிடப்படாத நிலையில், தடுப்பூசியை நிர்வகிக்கும் ஊழியர்கள் கூட தடுப்பூசி போடுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னால் தான் மோடிக்கு தடுப்பூசி போடுவதை அறிந்து கொண்டனர்.
“பிரதமர் மோடி வரப்போகிறார் என்பதை நான் இன்று காலை தான் தெரிந்துகொண்டேன். தடுப்பூசி செலுத்த என்னை அழைத்தார்கள். அவரை சந்தித்ததில் மகிழ்ச்சி” என்று நிவேதிதா கூறினார்.
“பிரதமர் மோடிக்கு பாரத் பயோடெக்கின் கோவாக்சினின் முதல் டோஸ் வழங்கப்பட்டுள்ளது. இரண்டாவது டோஸ் 28 நாட்களில் வழங்கப்படும். நாங்கள் எங்கிருந்து வருகிறோம் என்று அவர் எங்களிடம் கேட்டார்.” என்று அவர் கூறினார்.
நிவேதிதா கடந்த மூன்று ஆண்டுகளாக எய்ம்ஸில் பணியாற்றி வருகிறார்.
தடுப்பூசி நிர்வாக செயல்பாட்டின் போது வந்த இரண்டாவது செவிலியர், கேரளாவைச் சேர்ந்தவர். அவர், “பிரதமர் தடுப்பூசி போடுவதற்காக இங்கு வரப் போகிறார் என்பதை இன்று காலை நாங்கள் கண்டுபிடித்தோம். இது மிகவும் அருமையாக இருந்தது. பிரதமரைச் சந்தித்ததில் மகிழ்ச்சி” என்று கூறினார்.
முன்னதாக, தடுப்பூசியின் முதல் டோஸைப் பெற்ற உடனேயே, பிரதமர், “கொரோனா தடுப்பூசியை எய்ம்ஸில் எடுத்துக்கொண்டேன்” என்று ட்வீட் செய்துள்ளார்.
தடுப்பூசி போடச்சென்றபோது கிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த பெண்களின் ஆசீர்வாதத்தின் அடையாளமாக அசாமில் இருந்து காம்ச்சா அணிந்து பிரதமர் காணப்பட்டார். அவர் அதை பல சந்தர்ப்பங்களில் அணிந்திருப்பதைக் காண முடிந்தது.
இதற்கிடையே நாடு முழுவதும் இன்று 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட இதர தீவிர உடல்நலக் குறைபாடு உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நாடு முழுவதும் இன்று தொடங்கியுள்ளது