நெல்லையில் உள்ள நான்கு வயது சிறுமிக்கு இரவில் சிக்கன் கொடுத்து சிறிது நேரத்திலயே வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது குறித்த அதிர்ச்சி தகவலை மருத்துவர் அளித்துள்ளார்.
தச்சநல்லூரைச் சேர்ந்த சங்கரனின் 4 வயதான மகள் சாய் வைஷ்ணவி. நேற்று முன்தினம் (27.02.2021) இரவு அன்று இந்த குழந்தைக்கு ஆசையாகப் பெற்றோர் சிக்கன் கொடுத்த நிலையல் சிக்கன் சாப்பிட்ட ஒரு சில நிமிடங்களுக்குப் பிறகு குழந்தைக்கு வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்திருக்கிறாள்.
இதனால் பதறிப்போன பெற்றோர், குழந்தையைப் பாளை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போது அந்தக் குழந்தை அங்கு பரிதாபமாக இறந்தது.
இதனால், தச்சநல்லூர் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வரும் நிலையில் சிக்கன் சாப்பிட்ட சிறு நேரத்திற்குள் குழந்தையின் மரணம் ஏற்பட்டது குறித்து சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையின் குழந்தைகள் நல மருத்துவர் கூறியது: “நாம் குளிர்பானம் அருந்த உபயோகப்படுத்துகிற ஸ்ட்ரா சைஸ் அளவிலான விட்டம் கொண்டது தான் சிறு குழந்தைகளின் மூச்சுக்குழல். சிக்கனை குழந்தைகள் சாப்பிடும் போது அது மூச்சுக்குழாயை அடைக்கவும் குழந்தையின் மூளைக்குச் செல்லும் ரத்தமும், நுரையீரலிலிருந்து செல்கிற பிராண வாயுக்காற்றும் அடைபட்டு மூன்றிலிருந்து ஐந்து நிமிடத்திற்குள்ளாக மூளைக்குத் தேவையான பிராண வாயுவும், ரத்தமும் கிடைக்காமல் குழந்தைக்கு வலிப்பு ஏற்பட்டு மூச்சுத் தினறலாகி மயங்கி உயிருக்கே மோசமாகிவிடும் வாய்ப்பு உண்டு” என கூறியுள்ளார்.
அதனால், குழந்தைகள் உணவு சாப்பிடும்போது பெற்றோர்கள் கவனமாக இருந்து அவர்கள் நடந்துகொண்டோ அல்லது ஒடிக்கொண்டிருக்கும் போதோ உணவு தராமல் குழந்தைகளுக்குப் பல் முளைத்து 5 வயதுக்கு மேல் ஆனவுடன், சிக்கனை அவர்களுக்குச் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொடுக்க வேண்டும்.
மேலும் குழந்தைகளுக்கு நாம் நன்றாக மென்று சாப்பிட கற்று கொடுக்க வேண்டும் இல்லையென்றால் செரிமானக் கோளாறு பிரச்சினையாகிவிடும். ஒருவேளை சாப்பிடும்போது குழந்தைகளுக்கு இருமல் ஏற்பட்டால் தொடர்ந்து அவர்களுக்கு உணவு தரக் கூடாது பதிலாக குடிக்கத் தண்ணீர் கொடுக்க வேண்டும்” என்றார் மருத்துவர்.