மதுரை உட்பட பல்வேறு மாவட்டங்களை அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் யு.ஜேக்காப், எஸ்.கலைச்செல்வி, பி.ராஜேஷ், டி.டி.ஜெயகுமாரி, எஸ்.ஏஞ்சல் சினேகலதா, எம்.பெலிக்ஸ் இசபெல்லா, இ.ஜான்சி, பி.ரெனிஷா, ஆர்.பாப்பா, எம்.கிருஷ்ணகுமார் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், “ஆசிரியர்களாகப் பணிபுரிந்து வந்த நாங்கள் பதவி உயர்வு மூலம் அரசு உயர் நிலைப்பள்ளி ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டோம்.
அப்போது சொந்த மாவட்டங்களில் காலியிடம் இல்லாததால் வேறு மாவட்டங்களில் நியமிக்கப்பட்டோம். தமிழகத்தில் அரசு உயர் நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கான 2020ஆம் ஆண்டுக்கான பொது இடமாறுதல் கலந்தாய்வு கொரோனா காரணமாக நடத்தப்படவில்லை.
இந்நிலையில், அரசு உயர் நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு தொடர்பாக தமிழக அரசு பிப். 15ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தலைமையாசிரியர்களுக்கான பொது இடமாறுதல் கலந்தாய்வு நடத்தாமல் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடத்தினால் எங்களைப் போன்றவர்களுக்கு உரிய பணியிடம் கிடைக்காத நிலை ஏற்படும். எனவே தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வுக்கு தடை விதிக்க வேண்டும். பொது இடமாறுதல் கலந்தாய்வு நடத்திய பிறகே பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடத்த உத்தரவிட வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.எம். ரமேஷ் தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடத்த இடைக்கால தடைவிதித்து விசாரணையை ஒத்திவைத்தார்.
இன்று மீண்டும் நடைபெற்ற விசாரணைக்குப் பிறகு புதிய உத்தரவு ஒன்றை நீதிபதி பிறப்பித்துள்ளார். தலைமையாசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு இரண்டையும் ஏப்ரல் 30க்குள் நடத்துமாறு உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.