சென்னையில் 82 வயதாகும் பாட்டி ஒருவர் தனது பேரனுடன் இணைந்து உடற்பயிற்சி செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகிறது.
சென்னையை சேர்ந்தவர் கிரண். தற்போது 82 வயதாகும் இவர் சிறுவயதில் பள்ளிகளில் நடைபெறும் நீச்சல், கோ-கோ, கபடி போன்ற போட்டிகளில் பங்கேற்று மிகவும் சுறுசுறுப்பான மாணவியாக இருந்து வந்துள்ளார்.
திருமணத்திற்கு பின்னரும் பால் கறப்பது, தண்ணீர் இறைப்பது, மசாலா பொருட்கள் தயார் செய்வது என வீட்டிற்கு தேவையான அனைத்து வேலைகளையும் இவர் மிகவும் ஆக்டிவாக செய்து வந்துள்ளார்.
இருப்பினும் வயது முதிர்வினால் அவரது உடல்நிலையில் வலுவிழந்தது. இந்நிலையில், கடந்த 7 மாதங்களுக்கு முன்னர் படுக்கையில் இருந்து விழுந்து அவரது காலில் சுலுக்கு ஏற்பட்டது.
இதனால், அவர் தனது அன்றாட தேவைகளுக்கு குடும்பத்தினரின் உதவியை நாடியே இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இருப்பினும் அவரது குடும்பத்தினர் அவருக்கு உதவியாகவே இருந்தனர்.
தனது பழைய வாழ்க்கைக்கு திரும்ப எண்ணிய கிரண் அவரது பேரன் சிராக் சோர்டியா உடன் சேர்ந்து சிறிது சிறிதாக உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்தார். தற்போது அவர் வாரத்திற்கு 3 முறை உடற்பயிற்சி செய்கிறார்.
சேலை அணிந்து கிரண் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை சிராக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார். அத்துடன் “எனது பாட்டி தற்போது மிகவும் உற்சாகமாக உணர்கிறார். உடற்பயிற்சி செய்ய வயது ஒரு தடையில்லை என அவர் நிரூபித்துள்ளார்” என பதிவிட்டார்.
இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. அதைத்தொடர்ந்து சிராக்கிற்கு பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
இதுதொடர்பாக தனியார் பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டியளித்த கிரண், “உடற்பயிற்சி செய்ய தொடங்கியதும் என் கால்களில் வீக்கம் குறைந்து. கைகளில் வலிமையைப் பெற்றன. சிலநாட்களில் மூட்டு வலி மற்றும் பிபி பிரச்சினைகளும் குறைந்து விட்டன. நான் இப்போது மிகவும் இளமையாக இருப்பதாக உணர்கிறேன். சிலர் நான் இந்த வயதில் எடையை தூக்கக்கூடாது என சொல்கின்றனர். ஆனால், என் மனம் தற்போது இளமையாக இருக்கிறது” என தெரிவித்துள்ளார்.