கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பின்னரும் நாலந்தா மருத்துவ கல்லூரியைச் சேர்ந்த 23 வயது மருத்துவ மாணவர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் அவருடன் பயிலும் சக 15 மாணவர்களுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ளது. 180க்கும் அதிகமான நாடுகள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளன. உலக அளவில் இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது. இதுவரை இந்தியாவில் 1 லட்சத்து 57 ஆயிரத்து 346 பேர் வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் பல்வேறு நோய் தடுப்பு நடவடிக்கைகள் மூலம் வைரஸ் தாக்கம் படிப்படியாக குறைந்து வரும் நிலையில், இந்தியா பிரத்தியேகமாக 2 தடுப்பூசிகளை கண்டறிந்து அதை பொதுமக்களுக்கு இலவசமாக விநியோகித்து வருகிறது.
மார்ச் 1 முதல் இரண்டாவது கட்ட தடுப்பூசி திட்டம் நாடு முழுவதும் தொடங்கியுள்ளது. மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். தடுப்பூசியால் மட்டுமே இந்த வைரஸை கட்டுப்படுத்த முடியும் என்றும், தடுப்பூசியால் உயிரிழப்பை தடுக்க முடியும் என்றும் மக்கள் மத்தியில் நம்பிக்கை இருந்துவருகிறது.
ஆனால் இந்த நம்பிக்கையை கேள்விக்குறியாக்கும் வகையில் பாட்னாவில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
அதாவது நாளந்தா மருத்துவ கல்லூரியை சேர்ந்த 23 வயதான இறுதியாண்டு மருத்துவ மாணவர் தடுப்பூசி போட்டுக் கொண்ட பின்னரும் அவருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டு, அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
நாலந்தா மருத்துவக் கல்லூரியை சேர்ந்த மாணவர் சுபேந்த் சுமன் (22), கடந்த 22 நாட்களுக்கு முன்பு தனது முதல் டோஸ் கோவாக்சின் மருந்தை எடுத்துக்கொண்டார். அவர் பிப்ரவரி முதல் வாரத்தில் தடுப்பூசி எடுத்துக்கொண்டு நிலையில், பிப்ரவரி 25 அன்று அவருக்கு கொரோனா பாசிட்டிவ் என கண்டறியப்பட்டது. இதன் பின்னர் அவர் பெகுசாரில் உள்ள தனது வீட்டிற்கு ஓய்வெடுக்க சென்றார்.
அதைத் தொடர்ந்து அவருக்கு பாதிப்பு தீவிரமானதையடுத்து அவர் பிப்ரவரி 27 அன்று உள்ளூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை மாலை அவர் உயிரிழந்துள்ளார். இது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்ட பின்னரும் மருத்துவ மாணவர் உயிரிழந்திருப்பது தடுப்பூசியின் மீதான நம்பிக்கையை கேள்விக்குறியாகியுள்ளது.
அதேபோல் அவருடன் பயிலும் 15 மாணவர்களுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 16 ஆம் தேதி வைரசுக்கு எதிராக தடுப்பூசி திட்டம் தொடங்கியுள்ளது. முதல் கட்டத்தில் லட்சக்கணக்கான சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி விநியோகிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மார்ச் 1 முதல் இரண்டாம் கட்ட தடுப்பூசி திட்டம் தொடங்கியுள்ளது. அதில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 45 வயதிற்கு மேற்பட்ட கடுமையான நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில், தடுப்பூசி போட்டுக் கொண்ட பின்னரும் வைரஸ் தொற்றால் மருத்துவ மாணவர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.