தினமலர் நாளிதழின் முன்னாள் ஆசிரியர் டாக்டர். ஆர். கிருஷ்ணமூர்த்தி (88) சென்னையில் காலமானார். அவரது மறைவுக்கு ஊடக உலகினர் அரசியல் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலரும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
தினமலர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி மறைவுக்கு பாமக நிறுவனர் மருத்துவர் ச. இராமதாசு வெளியிட்ட இரங்கல்…
தினமலர் நாளிதழின் முன்னாள் ஆசிரியரும், இந்திய நாணயவியல் சங்கத்தின் தலைவருமான இரா. கிருஷ்ணமூர்த்தி இன்று காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.
தினமலர் நாளிதழின் ஆசிரியராகவும், நாணயவியல் சங்கத்தின் தலைவராகவும் பயனுள்ள பல பணிகளை செய்தவர். தமிழ் எழுத்து சீர்திருத்தத்தை தினமலர் நாளிதழில் முதலில் அறிமுகப்படுத்தியவர். கணினி பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் எழுத்துருக்களை உருவாக்கியவர் கிருஷ்ணமூர்த்தி ஆவார்.
நாணயவியல் கழகத்தின் தலைவராகவும், ஆராய்ச்சியாளராகவும் இருந்து இவர் நிகழ்த்திய பல கண்டுபிடிப்புகள் தான் பின்னாளில் தமிழ் செம்மொழி என்று அறிவிக்கப்படுவதற்கு உதவிய சான்றுகளில் குறிப்பிடத்தக்கவை ஆகும். இதற்காக பின்னாளில் இவருக்கு செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் சார்பில் தொல்காப்பியர் விருது வழங்கப்பட்டது குறிப்பிடப்பட வேண்டியதாகும்.
எனது பொதுவாழ்க்கையின் தொடக்க காலத்தில் நல்ல நண்பராக திகழ்ந்தவர். இறுதி வரை என் மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் கொண்டவர். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், தினமலர் பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.