சேலம் மாவட்டம் சங்ககிரி அருகேயுள்ள புதுவளவு பகுதியை சேர்ந்தவர் தொழிலாளி சரத்குமார். இவருக்கு பிரியாங்கா(23) என்ற மனைவியும் ஹிருத்திக்குமார் (6) என்ற மகனும், 3 மாத பெண் குழந்தையும் உள்ளனர்.
இந்த நிலையில், கடந்த ஆண்டு சங்ககிரியில் உள்ள கிரானைட் நிறுவன தொழிலாளி பார்த்திபன் என்பவருடன், பிரியாங்காவிற்கு பழக்கம் ஏற்பட்டு, கள்ளக்காதலாக மாறியுள்ளது.
உறவினர்கள் கண்டித்தும் உறவை கைவிட மறுத்ததால் பார்த்திபனை, சரத்குமார் மற்றும் பிரியாங்காவின் தந்தை தங்கவேல், அண்ணன் நந்தகுமார் ஆகியோர் கொலை செய்தனர்.
இதனால் மூவரும் கைதாகி சிறையில் இருந்து வந்தனர். கணவர் மற்றும் உறவினர்கள் சிறையில் இருந்ததால் பிரியாங்கா வறுமையில் வாடியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று குழந்தைகள் இருவரையும் கழுத்தை நெரித்து விட்டு, பிரியாங்கா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மயங்கி கிடந்த குழந்தைகளை அக்கம் பக்கத்தினர் மீட்டு, சங்ககிரி அரசு மருதுவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு 3 மாத பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
சிறுவன் ஹிருத்திக்குமார் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தகவல் அறிந்த சங்ககிரி போலீசார் குழந்தை மற்றும் பிரியங்காவின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர்.