நாடு முழுவதும் கடந்த ஆண்டு உச்சத்தில் இருந்த கொரோனா பரவல் படிப்படியாகக் குறையத் தொடங்கியது.
இந்நிலையில், மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், தமிழ்நாடு, குஜராத், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது.
கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், மத்திய அரசு நேற்று புதிய வழிகாட்டுநெறிகளை வெளியிட்டுள்ளது.
வணிக வளாகங்கள், வழிபாட்டுத் தலங்கள், உணவு விடுதிகள் போன்ற இடங்களில் மக்கள் கட்டாயம் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும் என்றும் சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.
வணிக வளாகங்களில் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிப்பதை உறுதி செய்ய தேவையான பணியாளர்களை நியமிக்க வேண்டும்.
அதேபோல் உணவு விடுதிகளில் மக்கள் உள்ளே அமர்ந்து சாப்பிடுவதற்குப் பதிலாக பார்சல் வாங்கிக்கொண்டு செல்வதை ஊக்குவிக்க வேண்டும். உணவுகளை டெலிவரி செய்யும் நபர்களின் வெப்பநிலையை சோதித்த பிறகே டெலிவரி செய்ய அனுமதிக்க வேண்டும்.
வழிபாட்டுத் தலங்களில் வெப்ப நிலையை பரிசோதித்தப் பிறகே மக்கள் உள்ளே அனுமதிக்கப்பட வேண்டும். முகக் கவசம் போடாதவர்களை வழிபாட்டுத் தலங்களில் அனுமதிக்கக்கூடாது போன்ற விதிமுறைகள் புதிய வழிகாட்டு நெறிமுறைகளில் இடம்பெற்றுள்ளன.