ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மூதாட்டி ஒருவர் தனது 101-வது பிறந்தநாளை குடும்பத்துடன் கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடினார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கூமாபட்டியைச் சேர்ந்த மகாதேவன் மனைவி பழனியம்மாள். செஞ்சுரி அடித்து 101 ஆவது வயதில் அடியெடுத்து வைத்திருக்கிறார். அத்துடன் 5 தலைமுறைகளையும் கடந்து இருக்கிறார். இவருக்கு 4 மகன்கள் மூன்று மகள்கள், 19 பேரன், பேத்திகள். 25 கொள்ளுப் பேரன் கொள்ளுப் பேத்திகள் 2 எள்ளு பேத்திகள் உள்ளனர்.
இன்றும் தனது பணிகளை தானே செய்து வருகிறார் ஆரோக்கியத்துடன். மனிதன் எப்படி ஆரோக்கியம் பேண வேண்டும் என்பதற்கு உதாரணமாக வாழ்ந்து வரும் இம்மூதாட்டியை அவரது வாரிசுகள் அனைவரும் சேர்ந்து 101-வது பிறந்தநாளை வியாழக்கிழமை ஸ்ரீவில்லிபுத்தூர் தனியார் திருமண மண்டபத்தில் வைத்து கொண்டாடினர். உறவினர்கள் அனைவரும் இதில் கலந்து கொண்டு அவரது ஆசீர்வாதம் பெற்றுச்சென்றனர்.
பழனியம்மாள் இரண்டாவது மகன் ராமகிருஷ்ணன் கூறுகையில், எனது தாயின் இந்த ஆரோக்கியத்திற்கு காரணம் அவரது உணவு பழக்கவழக்கங்கள் தான். காலையில் ஒரு இட்லி மதியம் 200 கிராம் சாதம் இரவு ஒரு தோசை என எளிமையான தனது உணவு பழக்கவழக்கத்தை இன்றும் கடைப்பிடித்து வருகிறார். அத்துடன் அவர் ஆகவே அவரது வேலைகளை செய்து கொள்கிறார்.
தினமும் 2 மணி நேரம் நாளிதழ்கள் படிக்கிறார். செய்தி சேனல்கள் பார்க்கிறார். அவர் இவ்வளவு நாள் ஆரோக்கியமாக இருந்து எங்களை வழி நடத்தியது எங்களுக்கு இறைவன் கொடுத்த மிகப்பெரிய ஒரு கொடை என்றார்.
அவரது பேத்தி லட்சுமி கூறுகையில், இன்று எங்கள் பாட்டி 101-வது பிறந்த நாளை நாங்கள் அனைவரும் இணைந்து மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடி இருக்கிறோம்.
இதற்கு முக்கிய காரணம் எங்களது பாட்டியின் உடல் ஆரோக்கியமே. எந்த விஷயத்தையும் மனதில் போட்டு அலட்டிக் கொள்ள மாட்டார். எவ்வளவு சிரமங்களையும் மனதில் வாங்கிக் கொள்ள மாட்டார். அதை ஒரு ஓரமாக வைத்து விட்டு எப்பொழுதும் போல் மகிழ்ச்சியாக இருப்பார். அவரது மனநிலையை ஒரே சீராக வைத்து இருந்தால் அதுவே அவரது இந்த ஆரோக்கியத்திற்கு காரணமாகும்.
எனவே அவரது வாழ்க்கை முறை எங்கள் அனைவருக்கும் ஒரு படிப்பினையாக உள்ளது என்றார்.