விமானம் ரன்வேயில் சென்றபோது தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக கூறியதுடன் அதற்கான சான்றுகளையும் காட்டிய பயணியால் பரபரப்பு ஏற்பட்டது.
விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் இறக்கப்பட்டனர். விமான இருக்கைகள் அனைத்தும் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டது
தில்லியில் இருந்து மராட்டிய மாநிலம் புனேவிற்கு இண்டிகோ நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் புறப்பட்டு ரன்வேயில் சென்று கொண்டிருந்தது. அப்போது பயணி ஒருவர் விமான பணிப் பெண்களிடம் தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக கூறியதுடன் அதற்கான சான்றுகளையும் காட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பணிப் பெண்கள் உடனடியாக விமானியிடம் தெரிவித்தனர்.
விமானியும் உரிய அனுமதி பெற்று விமானத்தை மீண்டும் விமான நிலைய பார்க்கிங் பகுதிக்கு கொண்டு வந்தார். பின்னர் விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் இறக்கப்பட்டனர். விமான இருக்கைகள் அனைத்தும் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டது.
பயணிகள் அனைவருக்கும் பிபிஇ எனப்படும் பாதுகாப்பு கவச உடைகள் அளிக்கப்பட்டது. இதற்கிடையே பாதிக்கப்பட்ட நபர் தில்லியில் உள்ள மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் அனுப்பி வைக்கப்பட்டார்.