ஈரானில் பயணிகள் விமானத்தை கடத்த திட்டமிட்ட நபரை ஈரான் புரட்சிகர காவல்படை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
ஈரானில் உள்ள அஹ்வாஸ் விமான நிலையத்தில் இருந்து பயணிகள் விமானம் ஒன்று மஷாத் என்ற நகருக்கு கடந்த வியாழக்கிழமை இரவு 10.10 புறப்பட்டு சென்றது. ஆனால் புறப்பட்டு சென்ற விமானம் ஈரானில் உள்ள இஸ்ஃபாஹான் விமான நிலையத்தில் தரை இறக்கப்பட்டது. அதற்கு காரணம் என்னவென்றால், விமானத்தில் பயணி ஒருவர் சந்தேகப்படும் வகையில் நடந்து கொண்டுள்ளார்.
அவரிடம் விமான அதிகாரிகள் விசாரித்துள்ளனர். ஆனால் அந்த நபர் சரியான பதில் எதுவும் கூறாமல் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை கொடுத்துள்ளார்.
இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் ஈரான் புரட்சிகர காவல் படைக்கு தகவல் தெரிவித்தவுடன் விமானி இஸ்ஃபாஹான் விமான நிலையத்தில் விமானத்தை உடனடியாக தரை இறக்கினார்.
விமானம் தரை இறங்கிய பிறகு அதில் இருந்து வெளியேற்றப்பட்ட அந்த நபர் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டார். விசாரணையில் அவர் பயணிகள் விமானத்தை கடத்த திட்டமிட்டதை ஒப்புக்கொண்டார்.
அதுமட்டுமின்றி அந்த விமானத்தை கடத்திய பின்பு அவர் சவூதி அரேபியா, ஓமன், குவைத்,பஹ்ரைன் போன்ற நாடுகளில் ஏதாவது ஒரு நாட்டில் தரையிறக்குவதற்கு திட்டமிட்டதும் அம்பலமானது.
தற்போது அவரை ஈரான் புரட்சிகர காவல்படை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். மேலும் அவர் குறித்து தகவல் எதுவும் வெளியிடவில்லை.