கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டி: பாஜக
கன்னியாகுமரி நாடாளுமன்ற மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் பாஜக., சார்பில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிடுவார் என அக்கட்சி அறிவித்துள்ளது.
தமிழக சட்டமன்றத்துக்கும், காலியாக உள்ள கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் ஏப்.6ஆம் தேதி அன்று தேர்தல் நடைபெறுகிறது. அதில் அதிமுக., கூட்டணியில் உள்ள பாஜக.,வுக்கு 20 சட்டமன்றத் தொகுதிகளும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான ஒப்பந்தம் நேற்று இரவு கையெழுத்தானது..
இந்நிலையில் கன்னியாகுமரியில் பாஜக., சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிடுவார் என அக்கட்சி மேலிடம் அறிவித்துள்ளது.
கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலில் வென்று, மத்திய இணை அமைச்சர் பதவியில் இருந்த பொன்.ராதாகிருஷ்ணன், மீண்டும் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் இந்தத் தொகுதியில் போட்டியிட்டபோது, தோல்வி அடைந்தார். காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் வெற்றி பெற்றிருந்தார். கடந்த வருடம் வசந்தகுமார் மறைந்ததைத் தொடர்ந்து, இந்தத் தொகுதி காலியாக உள்ளது. இதன் இடைத் தேர்தலில் தற்போது, பொன்.ராதாகிருஷ்ணனே மீண்டும் போட்டியிடுகிறார்.