ஆட்சிக்கு வரவேயில்லை. ஆனால் அதற்குள் மீண்டும் நிலம் அபகரிப்பில் ஈடுபடுவதா ? என்று திமுக.வினரை வசைபாடுகின்றனர் கரூர் பகுதி மக்கள். கரூர் அருகே தேர்தல் பணிமனைக்காக அடுத்தவர் நிலத்தில் அடியாட்களுடன் ஜரூராக தேர்தலுக்கு கட்டம் கட்டி இறங்கியிருக்கும் திமுக.,வினரால் கரூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் பாதுகாவலரின் நிலத்தையே அபகரிக்க முயற்சித்து அதில் பணிமனை அமைத்து வரும் திமுகவினரின் அராஜக நடவடிக்கை இப்போது கரூரில் பேசப்பட்டு வருகிறது.
கடந்த திமுக ஆட்சியின் போது நில அபகரிப்பு, அடுத்தவருடைய நிலத்தினை தங்கள் பெயரில் மிரட்டியும் முறைகேடாகவும் பட்டா போட்டுக் கொள்வது என்று பல்வேறு தரப்பு மக்களிடையேயும் அதிருப்திக்கு ஆளாகி, சர்ச்சைகளில் சிக்கியதால் தான், திமுக., ஆட்சியை மக்கள் அப்போது தூக்கி எறிந்தனர்.
இந்நிலையில் தற்போது ஆட்சிக்கு வராத போதே அதுவும் திமுக வின் தேர்தல் பணிமனைக்காக அடுத்தவர் நிலத்தினை அபகரித்து அதில் சொந்தம் கொண்டாடி வரும் திமுக வினரின் அராஜக செயல் இப்போது கரூர் பகுதி மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
கரூரை அடுத்த சின்ன கோதூர் பகுதியினைச் சார்ந்தவர் வி.பி.ராசப்பன். இவர், 1992 முதல் 2010 வரை மறைந்த முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் பாதுகாவலராக இருந்தவர். 2011-2018ல் தமிழக மின் துறை அமைச்சர் தங்கமணிக்கு பி.எஸ்.ஒ ஆக இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
இவருக்கு சொந்தமான 3 ஏக்கர் 19 செண்ட் நிலத்தில், திமுக வினர் தங்களது பணிமனையை அமைக்க முற்பட்டுள்ளனர். ஏற்கெனவே இங்குள்ள திமுக நிர்வாகிகள் சிலர் மீது நில ஆக்கிரமிப்பு வழக்கு நடந்து வரும் நிலையில், வர இருக்கும் சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் கரூர் சட்டமன்ற தொகுதிக்கு சின்ன கேதூர் 1 வது வார்டு பகுதிக்கு திமுக வினர் அடுத்தவர் வீட்டு நிலத்தினை அபகரித்து பணிமனை அமைத்து சொந்தம் கொண்டாடுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் வி.பி.ராசப்பன் மற்றும் அவரது மனைவி செல்வராணி ஆகியோர் புகார் அளித்ததன் பேரில், கரூர் காவல் ஆய்வாளர் சிவ சுப்பிரமணியன் விசாரணை நட்த்தியதன் பேரில் திமுக.,வினர் அந்தப் பணியை நிறுத்தினர். ஆனாலும், திமுக.,வைச் சார்ந்த வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் 15 பேர் பிரச்சினை செய்து, அந்த நிலத்திற்கும் அவர்கள் பத்திரம் வைத்துள்ளதாகக் கூறி தகராறில் ஈடுபட்டனர்.
கரூர் காவல்நிலைய ஆய்வாளர் நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் தீர்ப்பு வரும் வரை அங்கே யாரும் செல்லக் கூடாது என்று கூறி பிரச்னையை முடித்து வைத்தார். ஆனால் அதையும் மீறி திமுக வழக்கறிஞர் அணியினை சார்ந்த வழக்கறிஞர்கள் அப்பகுதியில் முகாம் இட்டு அடியாட்களுடன் அமர்ந்து தற்போது பணிமனை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆட்சிக்கு வராதபோதே, திமுக வினர் அடியாட்களுடன் வந்து அடுத்தவர் நிலத்தினை அபகரிக்கும் பொருட்டு வேலை செய்து வருகின்றனரே என்று பாதிக்கப்பட்ட பெண் செல்வராணி குற்றம் சாட்டியுள்ளார். இவர், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பாதுகாப்பாளர் ராசப்பனுடைய மனைவி.