மனைவியை அடித்த கணவரின் முன் ஜாமீனை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. மாமியார் வீட்டில் பெண்ணுக்கு காயம் ஏற்பட்டால் அதற்கு அப்பெண்ணின் கணவர்தான் பொறுப்பு ஏற்கவேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த குற்றச்சாட்டுக்கு உள்ளான நபருக்கு இது மூன்றாவது திருமணமாகும். அப்பெண்ணிற்கு இது இரண்டாவது திருமணமாகும். திருமணம் முடிந்து ஒரு வருடம் கழித்து 2018ஆம் ஆண்டு இவர்களுக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
அதன் பின்னர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக அப்பெண் தனது கணவர், மாமியார், மாமனார் உள்ளிட்டவர்கள் மீது லூதியானா காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த வழக்கில் ஜாமீன் கோரி பெண்ணின் கணவர் உச்ச நீதிமன்றத்தை அணுகினார்.
அவருடைய சார்பாக குஷாக்ரா மகாஜன் என்ற வழக்கறிஞர் ஆஜரானார்.
அப்போது கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ போப்டே, உங்கள் மனைவியை அடித்துள்ளீர்கள் எப்படிப்பட்ட மனிதர் நீங்கள் என்று கடுமையாக சாடினார்.
கணவர் தன்னுடைய கழுத்தை நெறித்ததாகவும், கருக்கலைப்பு செய்ததாகவும் அப்பெண் நீதிமன்றத்தில் கூறினார். தனது மாமியார் ஒரு கிரிக்கெட் பேட்டால் தன்னை அடித்ததாகவும் அப்பெண் கூறினார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.ஏ போப்டே தலைமையிலான அமர்வு , கணவர் வீட்டில் மனைவிக்கு காயம் ஏற்பட்டால் அதற்கு கணவர்தான் முழு பொறுப்பு என்று கருத்து தெரிவித்தனர். மேலும் கணவர் வீட்டில் உள்ள எந்த ஒரு உறவினராலும் மனைவிக்கு காயம் ஏற்பட்டால் அதற்கும் கணவர்தான் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்
முன்னதாக பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றங்கள் மனைவியை அடித்த கணவருக்கு ஜாமீன் தர மறுத்துவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.