பெண் சாமியார் பிள்ளைகளை நரபலி தர போவதாக வந்த தகவலால் பரபரப்பு ஏற்பட்டது
திருவள்ளூர்: ஒரு பெண் பெற்ற பிள்ளைகளை நரபலி கொடுக்கப்போவதாக தகவல் வந்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்துள்ளது பொதட்டூர்பேட்டை. இங்கு வசித்து வருபவர் ஜெயந்தி. 34 வயது. திருமணம் ஆகி 17 வயதில் 2 மகள்களும், 15 வயதில் ஒரு மகனும் இருக்கிறார்கள்.
ஜெயந்தி காளியை வழிபட்டு வருபவர். திடீர் திடீர் என சாமியாடுவார். அப்படி சாமி வந்துவிட்டால் குறி சொல்லுவாராம்.
குறி சொல்வதானால், தன்னுடைய சொந்த கிராமமான புச்சிரெட்டிபள்ளிக்கு செல்வாராம் ஜெயந்தி. வாரத்தில் 3 நாள், அதாவது வெள்ளி, சனி, ஞாயிறு சென்று விடுவாராம். குறி சொல்லும்போது, திடீரென உயிருள்ள ஒரு கோழியின் தலையை நறுக்கென கடிப்பாராம். ஜெயந்தியிடம் குறிகேட்க அக்கம் பக்க கிராமங்களில் இருந்து ஏராளமானோர் வந்து போவார்களாம்.
கடந்த சனிக்கிழமை ஜெயந்தி சாமி வந்து பிறகு குறி சொன்னாராம். தன்னுடைய வீட்டில் புதையல் இருப்பதாக அவரே அவருக்கு குறி சொல்லி உள்ளார். அதற்கு பிறகு சுயநினைவுக்கு அடைந்துள்ளார்.
அந்த புதையலை எடுக்க வேண்டும் என்றால், பிள்ளைகளை உயிருடன் நரபலி தர வேண்டும் என்று முடிவெடுத்து 3 பிள்ளைகளையும் கொல்ல முடிவு செய்தாராம். இந்த தகவல்தான் குழந்தைகள் நல அதிகாரிகளின் காதில் எட்டி உள்ளது.
இதைக்கேட்டதும், அதிகாரிகள் ஜெயந்தி வீட்டுக்கு விரைந்து வந்து விசாரணையை ஆரம்பித்தனர். ஆனால், அப்படி ஒரு நரபலியும், பூஜையும் தான் செய்யவில்லை என்றும், யாரோ தவறான தகவலை தந்திருப்பதாகவும் அதிகாரிகளிடம் வாதிட்டுள்ளார் ஜெயந்தி. எனினும் அதிகாரிகள் ஜெயந்தியின் பேச்சை நம்பாமல் வீட்டை சோதனை செய்துள்ளனர். அப்போது ஜெயந்தியின் டிரஸ்ஸில் ரத்தக்கரை இருப்பதையும் பார்த்துள்ளனர்.
அதை பற்றி கேட்டதற்கு சாமியாடும்போது கோழியின் கழுத்தை கடித்து ரத்தம் குடித்துவிட்டேன். அந்த கறை டிரஸ்ஸில் பட்டுவிட்டது என்று சொல்லி உள்ளார்.
ஆனால், எந்த நேரத்தில் ஜெயந்திக்கு சாமி வந்துவிட்டாலும், அது அவரது பெற்ற பிள்ளைகளுக்குதான் ஆபத்து நினைத்து, 3 பிள்ளைகளையும் அதிகாரிகள் மீட்டு காப்பகத்தில் சேர்த்துள்ளனர்.
ஜெயந்திக்கு மெடிக்கல் கவுனிசிலிங் தரவும் ஏற்பாடு செய்துள்ளனர். திருவள்ளூர் போலீசாருக்கும் இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்படவும், விசாரணை நடந்து வருகிறது.