தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்க துவங்கியுள்ள நிலையில், பொதுமக்கள் கொரோனா தொற்று குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாமல், முக கவசம் அணியாமல், சமூக இடைவெளியையும் பின்பற்றாமல் வெளியில் நடமாடுகின்றனர்.
இது குறித்து தமிழக சுகாதார செயலளர் ராதாகிருஷ்ணன் தனது கவலையைத் தெரிவித்திருந்த நிலையில், உதகையில், முக கவசம் அணியாமல் வெளியே பொது இடங்களில் யாராவது நடமாடினால், 6 மாத சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும் என்று அம்மாவட்ட ஆட்சியர் திவ்யா அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் 11ம் வகுப்பு வரையில் ஆல் பாஸ் என்று அரசு அறிவித்ததில் இருந்து மக்கள் சுதந்திரமாக சமூக இடைவெளிகளையும் பின்பற்றாமல் சுற்றத் துவங்கியுள்ளனர்.
குறிப்பாக கொரோனா தொற்று கடந்த 16 நாட்களில் 50 சதவிகிதம் அதிகரித்துள்ளது. நீலகிரிக்கு அதிக சுற்றுலா பயணிகள் தினந்தோறும் வந்து குவிகின்ற நிலையில், தற்போது கொரோனா இரண்டாவது அலை வந்தால், அதனைக் கட்டுப்படுத்த முடியாது என்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உதகையில் இது வரையில், விதிமுறைகளை மீறியதாக 30,68,000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.