முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் பிரச்சார ஜெனரேட்டர் வாகனம் தம்மம்பட்டியில் திடீரென தீப்பற்றி எரிந்து முழுவதும் நாசம் ஆனது.
எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் எடப்பாடிபழனிச்சாமி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
சேலம் மாவட்டத்தில் ஏற்காடு, ஆத்தூர், கெங்கவல்லி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் எடப்பாடிபழனிச்சாமி இன்று பிரச்சாரம் செய்கின்றார்.
வாழப்பாடி, தம்மம்பட்டி, ஆத்தூரில் இன்று பிரச்சாரத்தினை அவர் மேற்கொள்கிறார்.
தம்மம்பட்டியில் இன்று கெங்கவல்லி வேட்பாளர் நல்லதம்பியை ஆதரித்து நடைபெறூம் பிரச்சார கூட்டத்தில் முதல்வர் பங்கேற்கிறார்.
இதற்காக தம்மம்பட்டி பேருந்து நிலையம் அருகே மேடை அமைக்கப்பட்டு வருகிறது. பிரச்சாரத்திற்காக சேலத்தில் இருந்து ஈச்சர் லாரியில் பெரிய ஜெனரேட்டர் நேற்று மாலை வந்தது.
பேருந்து நிலையத்தின் அருகே உள்ள டிரான்ஸ்பார்மர் அருகே அந்த வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இரவு 8 மணியளவில் திடீரென அந்த வாகனம் தீப்பற்றி எரிந்தது.
உடனே அருகில் இருந்த ஆட்டோக்கள், வாகனங்கள் அகற்றப்பட்டன. அங்கிருந்தவர்கள் கூடி தீயை அணை அணைக்க முற்பட்டனர். அரைமணி நேரத்திற்கு பின்னர் வாகனம் முற்றிலுமாக எரிந்துநாசமாகிவிட்டது.
ஜெனரேட்டர் வாகனத்தில் தீ விபத்து ஏற்பட்டதில், ரூ.5 லட்சம் மதிப்புள்ள ஜெனரேட்டர் தீயில் எரிந்து நாசமானது.
முதல்வரின் பிரச்சாரத்திற்காக வந்த வாகனம் தீப்பற்றி எரிந்த சம்பவம் தம்மம்பட்டி மக்களை அதிரவைத்திருக்கிறது.