பஸ் டிரைவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட விவகாரத்தில் கள்ளக்காதல் விவகாரம் வெளியானது.
23 வயது இளைஞருடன் இருந்த நெருக்கம் காரணமாக கணவரை கொல்ல முயன்ற 41 வயது பெண் கைது செய்யப்பட்டார்.
தெற்கு தில்லி ராணுவ காலனி பகுதியில் தனியார் பஸ் டிரைவர் பீம்ராஜ்(45) என்பவர் காரில் அமர்ந்து இருந்த போது அந்த வழியாக பைக்கில் வந்த நபரால் சுடப்பட்டார். கழுத்தில் குண்டு பாய்ந்த நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரணை நடத்தினர். அப்போது குற்றவாளி வந்த பைக் மூலம் ஆய்வு நடத்திய போது கமலாநகர் பகுதியை சேர்ந்த லகான் என்பவர் சிக்கினார்.
அவரிடம் விசாரித்த போது கோவிந்தபுரியை சேர்ந்த ரோகன் என்கிற மணிஷ் பைக்கை வாங்கி சென்றது தெரிய வந்தது. சிசிடிவிகாட்சிகளிலும் பைக்கை பார்க் செய்து விட்டு ரோகன் ஹெல்மெட்டை கழற்றி விட்டு செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் ரோகனை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது சாலையில் வாகனம் ஓட்டிய போது ஏற்பட்ட மோதலில் பீம்ராஜை கொலை செய்ய முயற்சி செய்தாக ரோகன் கூறினார். அதன்பின் அவரது செல்போன் அழைப்புகளை போலீசார் பரிசோதித்த போது பீம்ராஜ் மனைவியான 41 வயது பபிதா அடிக்கடி போன் செய்து இருப்பது தெரிய வந்தது.
இதுபற்றி விசாரித்த போது பபிதாவுக்கும், ரோகனுக்கும் இடையே கடந்த 4 மாதங்களாக கள்ளகாதல் இருந்து வந்ததும், இது வெளியே தெரிந்ததால் பீம்ராஜ் தனது மனைவி பபிதாவை அடித்து துன்புறுத்தியதும் தெரியவந்தது.
இதையடுத்து ரோகன் உதவியுடன் பீம்ராஜை தீர்த்துக்கட்ட பபிதா திட்டமிட்டார். அதன் அடிப்படையில் நாட்டுத்துப்பாக்கி வாங்கி பீம்ராஜ்மீது ரோகன் துப்பாக்கிச்சூடு நடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பபிதாவையும் போலீசார் கைது செய்தனர்