நாடகக் கலைஞர் ஒருவர் மேற்குவங்கத்தில் பாஜகவில் இணைந்ததால், அவரை தங்கள் நாடகத்திலிருந்து நாடகக் குழு நீக்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்பால் தத்தா எழுதிய கும் நெய் நாடகத்தை தழுவி எடுக்கப்படும் ஒரு நாடகத்தில் கவுசிக் கார் எனும் நாடகக் கலைஞர், பாஜகவில் இணைந்த ஒரே காரணத்திற்காக நீக்கப்பட்டுள்ளார். கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவாளரான சவுரவ் பாலோதி நடத்தி வரும் இச்சாமோட்டோ என்ற நாடகக் குழுவின் இந்த முடிவைத் தொடர்ந்து, சவுரவ் பாலாதி தற்போது கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
இருப்பினும், கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவாளரான பாலோதி தனது முடிவை நியாயப்படுத்தினார். பாஜகவில் சேர கவுசிக் கார் எடுத்த முடிவு அவரை வெளியேற்றுவதற்கு போதுமான காரணம் என்று கூறினார்.
ஒரு பேஸ்புக் பதிவில், பாலோதி, “நாங்கள் கவுஷிக் காரை கும் நெய் நாடகத்திலிருந்து நீக்கியுள்ளோம். அவர் பாஜகவில் சேர்ந்துள்ளார், தற்போதைய சூழ்நிலையில் அவரை நீக்குவதற்கு இதுவே போதுமானது. இந்த நாடகத்தில் வகுப்புவாத மக்களுக்கு இடமில்லை. எனவே, தொலைந்து போங்கள். நாடகத்தின் புதிய தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும். அன்புடன், இச்சாமோட்டோ.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
பின்னர் அவர் ஊடகங்களுக்கு அளித்த ஒரு பேட்டியில், “தத்தின் நாடகத்தைத் தழுவி எடுக்கப்படும் ஒரு நாடகத்தில், கவுசிக் மற்றும் நானும் அவரது கதாபாத்திரத்தை உருவாக்கி அவருக்கு அக்லக் என்று பெயரிட்டோம்.
அக்லக்கின் வீட்டை ஒரு கும்பல் தாக்கி, மாட்டிறைச்சி சாப்பிட்டதாக சந்தேகத்தின் பேரில் அவரைக் கொன்ற 2015 தாத்ரி வழக்கின் அடிப்படையில் இந்தப் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. பாஜகவில் சேர்ந்த பிறகு அவரை அக்லக் கதாபாத்திரத்தில் நடிக்க அனுமதிப்பது நாடகத்தின் ஆன்மாவைத் தாக்கும்.” என்று கூறினார்.
இதற்கிடையே நாடகத்திலிருந்து நீக்கப்பட்ட கவுசிக் காருக்கு ஆதரவு பெருகி வருகிறது. மேற்குவங்கத்தைச் சேர்ந்த பல்வேறு கலைஞர்களும் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்