ஓய்வுபெற்ற நடத்துனரிடம் வருமான வரித்துறை அதிகாரிகளை போல நடித்து, ரூ.45 இலட்சம் ரொக்கம், 60 பவுன் நகைகளை அபகரித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேரில் உள்ள முக்கிய குற்றவாளியான பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள பால்பண்ணைச்சேரி பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தவர் சுப்பிரமணியன். இவர் அரசு போக்குவரத்தில் நடத்துனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். இந்நிலையில், இவர் அந்த பகுதியில் விநாயகர் கோவில் வைத்து பராமரித்து வந்த நிலையில், கோவிலுக்கு வந்த நாகை ஆண்டோ சிட்டி பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் மற்றும் அவரது மகள் ராஜேஸ்வரி சுப்பிரமணியன் குடும்பத்திற்கு அறிமுகமாகியுள்ளனர்.
சுப்பிரமணியனின் குடும்பத்தாரிடம் ராஜேஸ்வரி நெருங்கிப் பழகிய நிலையில், ஓய்வுபெற்ற நடத்துனருக்கான பி.எஃப் பணம் மற்றும் ஓய்வூதிய பலன்கள் குறித்து அறிந்து கொண்டுள்ளார். இதனையடுத்து ராஜேஸ்வரி குடும்பத்தினர் சுப்பிரமணியத்திடம் இருந்த பணத்தைக் கறக்க திட்டமிட்டுள்ளனர்.
இதற்கு, தனது பூர்வீக சொத்தை பல கோடி ரூபாய்க்கு விற்பனை செய்து இருப்பதாகவும், அதுகுறித்த ஆவணங்கள் வருமானவரித்துறை வசம் இருப்பதாகவும், அந்த சொத்துக்களை மீட்க ரூ.45 இலட்சம் தேவைப்படுவதாகவும் கூறியுள்ளார். சுப்பிரமணியன் இதனை நம்ப வேண்டும் என்பதற்காக வருமான வரித்துறை அதிகாரிகள் போல தனது குடும்பத்தினர் ராகுல் உள்ளிட்ட 7 பேரை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.
வருமான வரித்துறை அதிகாரிகள் போல கையெழுத்திட்ட ஆவணங்கள், போலி ஸ்டாம்புகள் போன்றவற்றை காண்பித்து ரூ.45 இலட்சம் மற்றும் 60 பவுன் நகைகளை அவரிடமிருந்து வாங்கி சென்றனர். நகை மற்றும் பணம் சென்று பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், எதுவும் திரும்பி வரவில்லை. மேலும், ராஜேஸ்வரி உட்பட 8 பேரும் தலைமறைவாகியுள்ளனர்.
இதனையடுத்து, சுப்பிரமணியம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ராஜேஸ்வரி, ராமகிருஷ்ணன், சாந்தா, நந்தினி, முருகன், வெங்கட பாலாஜி, ராகுல், ராமு, ராஜா ஆகியோரை தேடி வந்த நிலையில், தஞ்சாவூரிலிருந்த ராஜேஸ்வரியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.