உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த இரண்டடி மனிதர் தனக்கு திருமணம் செய்துவைக்கும்படி காவல்துறையினரை அணுகியுள்ளார்.
உத்தரப்பிரதேசத்தின் ஷாம்லி மாவட்டத்தில் உள்ள கைரானா என்ற ஊரைச்சேர்ந்தவர் ஹசீம் மன்சூரி (26). இவர் இரண்டு அடி உயரமே உள்ளதால், யாரும் இவரை திருமணம் செய்துகொள்ள முன்வரவில்லை.
உயரம் குறைவாக இருப்பதால் சிறுவயது முதல் பல அவமானங்களை இவர் சந்தித்துள்ளார். தன்னோடு படித்தவர்கள் கேலி செய்ததால் 5-ம் வகுப்பிலேயே படிப்பை நிறுத்திவிட்டு, சகோதரரின் அழகுசாதன பொருட்கள் விற்பனையகத்தில் வேலைக்கு சேர்ந்திருக்கிறார்.
ஹசீம் மன்சூரிக்கு 21 வயதாக இருக்கும்போதே, அவரின் வீட்டார் அவருக்கு பெண் தேடத்தொடங்கினர்.
ஆனால் இதுவரை அவருக்கு திருமணமாகவில்லை. இதனால் மனவேதனையடைந்த ஹசீம் மன்சூரி உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வரான அகிலேஷ் யாதவை சந்தித்து தனக்கு உதவுமாறு கேட்டுக் கொண்டார்.
மேலும் தற்போதைய முதல்வரான யோகி ஆதித்யநாத்திற்கும் கடிதம் எழுதியுள்ளார். கடந்த ஆண்டு, காவல்துறையினரிடம் தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி இவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்நிலையில் தற்போது மீண்டும் அவர் காவல்துறையினரை சந்தித்து தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி மீண்டும் கூறியுள்ளார். மேலும் இது மக்கள் சேவையில் வரும் என்று தெரிவித்துள்ளார்.