நள்ளிரவில், பக்கெட் தண்ணீரில் விளையாடிய, ஒன்றரை வயது பெண் குழந்தை, தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தது.
சென்னை, மண்ணடி, சுப்பு பிள்ளை தெருவைச் சேர்ந்தவர் குமரேசன், 23. இவர் மனைவி கலைவாணி, 20. இவர்களுக்கு, ஒன்றரை வயதில், இனியா ஸ்ரீ என்ற பெண் குழந்தை இருந்தது.
நேற்று முன்தினம் இரவு, குழந்தையை அருகில் படுக்க வைத்து, கணவன், மனைவி துாங்கினர். நள்ளிரவில் விழித்து எழுந்த குழந்தை, குளியல் அறைக்கு சென்று, பக்கெட்டிலிருந்த தண்ணீரில் விளையாடியுள்ளது.
அப்போது, தலைக்குப்புற பக்கெட் தண்ணீருக்குள் கவிழ்ந்து மூழ்கியுள்ளது. திடுக்கிட்டு எழுந்த பெற்றோர், குழந்தையை காணாமல் தேடியுள்ளனர். குளியலறையில் பார்த்த போது, குழந்தை பக்கெட் தண்ணீருக்குள், மூச்சு பேச்சின்றி இருந்துள்ளது.
உடனே பெற்றோர், ஸ்டான்லி மருத்துவமனைக்கு குழந்தையை துாக்கிச் சென்றனர்.பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். வடக்கு கடற்கரை போலீசார், உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.