கடலூர் அருகே மனைவி மற்றும் அவரது தாயை வெட்டிக் கொன்றவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
கடலூர் முதுநகர் சலங்கைக்காரத் தெருவைச் சேர்ந்தவர் ரவி மனைவி பூங்கொடி (48). இவர்களது மகள் மீனா (30).
இவருக்கும் அருகிலுள்ள சோனங்குப்பத்தைச் சேர்ந்த நம்புராஜ் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருணம் நடந்துள்ளது. இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பினால் மீனா தனது தாய் வீட்டில் தங்கியிருந்துள்ளார்.
இந்நிலையில், திங்கள்கிழமை மாலையில் நம்புராஜ், தனது மாமியார் வீட்டிற்குச் சென்று சமாதானம் பேசியுள்ளார். இதில், உடன்பாடு எட்டப்படவில்லை.
இதனால், ஆத்திரத்திலிருந்த அவர் இருவரையும் பின்தொடர்ந்து சாலையில் சென்ற போது இருவரையும் சராமாரியாக கையில் வைத்திருந்த கத்தியால் வெட்டியுள்ளார்.
இதில், இருவரும் பலத்த அலறல் சத்தத்துடன் சரிந்து சம்பவ இடத்திலேயே இறந்தனர். இவர்களது அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் ஓடி வருவதை கண்ட நம்புராஜ் அங்கிருந்து தப்பியோடினார்.
தகவலறிந்த கடலூர் முதுநகர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று சடலங்களை கைப்பற்றி உடற்கூராய்விற்காக கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தப்பியோடிய நம்புராஜை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.