பெரம்பலூர் அருகே வெள்ளனூர் கிராமத்தில், கிணற்றில் தவறி விழுந்து ஒன்றரை வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பின்புறம் வசித்து வருபவர்கள் தேவன், மீனா தம்பதியினர். இவர்களுக்கு நவநிஷா (7), பவதாரணி (5), தேவசீலன் (1) ஆகிய 3 பிள்ளைகள்.
கிணறு வெட்டும் தொழில் செய்துவரும் தொழிலாளிகளான தேவன், மீனா தம்பதியினர் கடந்த சில தினங்களாக, புது நடுவலூர் ஊராட்சிக்கு உட்பட்ட வெள்ளனூர் கிராமத்தில் தங்கிக்கொண்டு அவ்வூரை சேர்ந்த வேலாயுதம் என்பவருக்கு சொந்தமான கிணறு வெட்டும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இதனால் தங்களது பெண் குழந்தைகளான நவநிஷா, பவதாரிணி ஆகியோரை உறவினர் ஒருவர் வீட்டில் பாதுகாப்பாக விட்டுவிட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று தம்பதியினர் வீட்டில் இருந்த போது அவர்களது ஒன்றரை வயது ஆண்குழந்தை தேவசீலன் தவழ்ந்து விளையாடியபடி சென்று அருகில் உள்ள கிணற்றில் தவறி விழுந்ததால் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தான்.
மாலையில் குழந்தையை காணாமல் அக்கம் பக்கத்தில் தேடிப்பார்த்த தம்பதியினர், பின்னர் கிணற்றில் தங்களது குழந்தையின் சடலம் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர்.
பின்னர் உயிர் இருக்கும் எப்படியாவது காப்பாற்றி விடலாம் என நினைத்து குழந்தையின் சடலத்தை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.
அங்கு குழந்தை இறந்தது உறுதி செய்யப் பட்டது. இச்சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.