சிஷ்யர்:
இந்து மதத்தை விட்டு வெளியேறி வேறு மதங்களை ஒப்புக் கொண்டவர்கள் பலர் இருக்கின்றார்கள். இவர்களில் சிலர் திரும்பவும் இந்துமதத்திற்கு சேர வேண்டும் என்று விரும்பினால் அவர்களை இப்போது சேர்த்துக்கொள்ள முடியுமா?
ஆச்சார்யாள்: சாஸ்திரங்களில் கூறப்பட்டவை நமக்கு வழிகாட்டியாக இருக்கின்றன. இந்து மதத்தைவிட்டு ஒருவன் வெளியேறி விட முடியும் என்று சாஸ்திரங்களில் கூறப்படவில்லை. ஆகவே சாஸ்திரங்களின் கட்டளைக்கு கட்டுப்படாதவன் பிரஷ்டன் ( தவறியவன்) ஆகிறான். ஆகையால் ஒருவன் இந்து மதத்தை விட்டுச் செல்லும் பிரச்சனையே ஏற்படுவதில்லை.
சிஷ்யர்:
ஒருவன் மீண்டும் இந்துவாக வாழ வேண்டும் என்று விரும்பினால் என்ன செய்ய வேண்டும்?
ஆச்சாரியாள்:
வெவ்வேறு பாவங்களுக்காக பொருத்தமான பிராயச்சித்தங்கள் நம் சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கின்றன. நம் ஸநாதன தர்மத்தை அனுஷ்டிக்காமல் இருந்ததற்காக பொருத்தமான பிராயச்சித்தங்களை ஒருவன் முதலில் மேற்கொள்ளலாம். உதாரணத்திற்கு புனிதமான கங்கையில் ஸ்நானம் செய்து நம்முடைய சாஸ்திரங்களில் சிரத்தை வைத்துக் கொண்டால் அவர்களை மீண்டும் இந்துக்களாக கருதுவதில் நமக்கு ஒன்றும் ஆட்சேபணை இல்லை.
சிஷ்யர்:
அவர்களை இந்துக்களாக ஒப்புக் கொள் வதற்காக நியமங்களுடன் கூடிய மதம் மாற்றும் முறை ஒன்று இருந்தால் நன்றாக இருக்காதா?
ஆச்சாரியாள்: நன்றாகவே இருக்காது. ஏனென்றால் அவர்கள் இந்து மதத்தை விடவே இல்லை என்ற சாஸ்திரங்களைக்கிணங்க இருக்கும் நமது கருத்துக்கு அது முற்றிலும் முரண்பாடாக இருக்கும்.
சிஷ்யர்:
வெளிநாட்டவர்கள் எந்நாளும் இந்துக்களாக இருக்கவில்லை.அவர்களை இந்து மதத்திற்குச் சேர்த்துக் கொள்வதற்காக ஏதாவது செய்ய முடியுமா?
ஆச்சாரியாள்:
நமது ஓர் அரசன் வெளிநாட்டை வென்றால் அந்நாட்டு மக்களும் நம் சாஸ்திரங்களில் உபதேசிக்கப்பட்ட சாமானிய தர்மங்களை அனுஸரிப்பதற்குத் தகுதி உள்ளவர்களாக இருக்கிறார்கள் என்று மனு கூறியிருக்கிறார். இதன்படி வெளிநாட்டைச் சேர்ந்த எவர்கள் நம் இந்து மதத்தில் நம்பிக்கை வைத்திருக்கிறார்களோ அவர்களை இந்துக்களாகக் கருதுவதற்கு நாம் தயாராக இருக்கிறோம். அவர்களும் சாமான்ய தர்மங்களைப் பின்பற்றுவதற்கு தகுதி உடையவர்களாக இருக்கிறார்கள்.