கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட குஜராத் மாநில அமைச்சருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சையை உண்டாக்கியுள்ளது.
கொரோனா தொற்று பாதிப்பை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. பல்வேறு மாநில அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் மக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் குஜராத் மாநில அமைச்சரான ஈஸ்வர்சிங் படேலுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனை அவரே உறுதிப்படுத்தியுள்ளார். தனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது குறித்து தெரிவித்த அவர், கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை பரிசோதனைக்கு உள்படுத்திக் கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
இதனிடையே அவர் ஏற்கனவே கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டது தெரியவந்துள்ளது. அமைச்சர் ஈஸ்வர்சிங் முன்னதாக நேற்றுமுன்தினம் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட அமைச்சருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.