கும்மிடிபூண்டியில் உள்ள இரும்பு உருக்காலைகளில் பறிமுதல் செய்யப்பட்ட பத்து டன் வெடிகுண்டுகளை முற்றிலுமாக அழிக்க காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் கடந்த 2008ஆம் ஆண்டு சிப்காட் வளாகத்தில் கிணற்றில் கிடந்த துப்பாக்கி தோட்டாக்களை எடுத்தபோது இரண்டு சிறுவர்கள் படுகாயமடைந்தனர்.
இதனை தொடர்ந்து சிப்காட் வளாகததில் உள்ள 22 இரும்பு உருக்கு ஆலைகளில் பத்து டன் அளவிற்கு வெடிக்கும் நிலையில் இருந்த கண்ணிவெடிகள், பீரங்கி குண்டுகள், ராக்கெட் லாஞ்சர்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும், சட்டவிரோதமாக வெளிநாட்டில் இருந்து பழைய இரும்பு பொருட்கள் என்ற போர்வையில் இறக்குமதி செய்த இரும்பு உருக்காலை உரிமையாளர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்
மேலும், ராணுவ சிறப்பு குழுவினர் ஆய்வு மேற்கொண்டு பறிமுதல் செய்யப்பட்ட கண்ணிவெடிகள் வெடிக்கும் நிலையில் உள்ளது என உறுதி செய்தனர்.
இந்நிலையில் எவ்வித பாதுகாப்பும் இன்றி வெட்டவெளியில் குவித்து வைக்கப்பட்ட வெடிகுண்டுகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் தலைமையிலான போலீசார் ஆய்வு மேற்கொண்டு, மாதர்பாக்கம் பகுதியில் ராணுவ அதிகாரிகள் முன்னிலையில் செயலிழக்க முடிவு செய்துள்ளனர்.