சிஷ்யர்: மந்திர ஜெபம் செய்யும்போது அந்த மந்திரத்தின் சந்தம் தேவதை முதலியவைகளை நன்கு தெரிந்து கொள்ள வேண்டுமா?
ஆச்சாரியாள்: ஆம்
சிஷ்யர்: ஜபம் செய்வதற்கு முன்னும் பின்னும் நாம் ந்யாஸங்களை செய்ய வேண்டுமா?
ஆச்சாரியாள்: ஆம் செய்து கொள்ள வேண்டும்
சிஷ்யர்: தியான ஸ்லோகத்தில் கூறியபடியே தியானம் செய்வது தான் நல்லதா?
ஆச்சாரியாள்: சாமானியமாக அப்படித்தான் செய்ய வேண்டும் ஆயினும் குரு வேறுவகையில் செய்யச்சொல்லி உபதேசம் கொடுத்தால் அவ்வகையிலும் செய்யலாம்
சிஷ்யர் : குருவின் உபதேசம் பெற்ற பிறகுதான் ஜெபம் செய்வது சரியா?
ஆச்சாரியாள்: குருவின் உபதேசம் மிக அவசியம்
சிஷ்யர்: மனதாலே ஜெபம் செய்வதற்கு ஏதாவது நியமங்கள் இருக்கின்றனவா?
ஆச்சார்யாள்: இல்லை
சிஷ்யர்: நாம் எவ்வளவு முறை ஜெபிக்கிறோமோ அவ்வளவுக்கு நமக்கு அது நலம் பயக்கும். சிறிது பழகி விட்டால் நம்மை அறியாமல் ஜபத்தை நாமாகவே செய்து கொண்டிருப்போம். பிறகு கனவின் போதும் இது போன்று ஏற்படலாம்.
சிஷ்யர்: காயத்ரீ ஜபத்தை மனதாலேயே ஜெபிக்கும்போது அம்மந்திரத்தின் ஸ்வரத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்பது தேவையா?
ஆச்சாரியாள்: உதடுகளை அசைத்து ஜெபித்தால் கவனம் வைக்க வேண்டும். மனதால் காயத்ரி மந்திரத்தை ஒரு நிலைப்படுத்தி சொன்னால் ஸ்வர விஷயத்தில் அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்காமல் இருக்கலாம். மானசீகமாக செய்கையில் வெறும் மந்திரத்தை ஜெபிப்பது போதுமானது.
சிஷ்யர்: மனதை ஒருநிலைப்படுத்தாது ஜெபம் செய்து வருவது பலனளிக்குமா?
ஆச்சரியாள்: ஜபம் எப்போதும் பலனளிக்கும். ஆனால் மனதை ஒரு நிலைப்படுத்தி செய்தால்தான் அது விசேஷ பலன் அளிக்கும். இல்லாவிட்டால் பலன் சற்று அளவிற்குதான் இருக்கும்.
சிஷ்யர்: வேத மந்திரங்களை எப்போது சரியான ஸ்வரத்துடன் தான் சொல்லவேண்டுமா? தவறாகச் சொன்னால் பாவம் உண்டா?
ஆச்சாரியாள்: ஆம் ஸ்வரங்களை ஒழுங்காக உச்சரிக்கவேண்டும்.
சிஷ்யர்: ஒருவன் தானாகவே வேத மந்திரங்களை கற்றுக் கொள்ளலாமா?
ஆச்சாரியாள்; இல்லை குரு ஒருவரிடமிருந்து அவர் சொல்லிய பின்னரே வேத மந்திரங்களை கற்க வேண்டும். ஆதலால் தான் குமாரிலபட்டர் (வேதஸ்த்யாத்யனம் சர்வம் குருவத்யயன பூர்வகம்) குருவிடம் கற்ற பிறகுதான் வேதத்தின் அத்யயனம் என்று கூறினார்.
சிஷ்யர்: வேத மந்திரங்களை சரியாக உச்சரிப்பதால் தான் என்ன பிரயோஜனம்?
ஆச்சாரியாள்: ஒருவனுடைய மனது புனித மாகி விடும் பாவங்கள் போய்விடும்
சிஷ்யர்: உபநிஷத்துக்கள் எல்லாமே வேதங்களின் பகுதிகள் என்பதே சம்பிரதாயம். ஆனால் பல உபநிஷத்துக்களுக்கு எவ்வாறு ஸ்வரம் கூற வேண்டும் என்பது சம்பிரதாயத்திலேயே இல்லையே. இம்மாதிரிச் சூழ்நிலைகளில் என்ன செய்ய வேண்டும்?
ஆச்சார்யாள்: அந்த உபநிஷத்துக்களிலும் ஸ்வரம் முன்பு இருந்திருக்கவேண்டும். ஏனென்றால் அவை வேதத்தின் பகுதிகள் ஆனால் காலப்போக்கில் அந்த ஸ்வரநியமங்கள் விட்டு போயிருக்கின்றன.
சிஷ்யர்: பிறகு அம்மாதிரி உபநிஷதங்களை எவ்வாறு பாராயணம் செய்வது?
ஆச்சாரியாள்: இந்த பநிஷத்துக்களில் சம்பிரதாயத்திலேயே ஸ்வரங்கள் விட்டுப் போயிருக்கின்றனவோ பாராயணம் செய்யும்போது அங்கு ஸ்வர நியமங்களைக் கவனிக்க வேண்டிய அவசியம் இல்லை. அதனால் பாவம் ஒன்றும் வராது.
சிஷ்யர்: எவ்வித மந்திரங்களைத் தகுதி உள்ளவர்கள் அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆச்சாரியார் அறிவுரை கூறுவார்களா?
ஆச்சாரியாள்: ருத்ரம் சமகம் ஸூக்தங்கள் இவைகளை தகுதியுள்ள எல்லோரும் நிச்சயமாக கற்றுக் கொள்ள வேண்டும். ஏனென்றால் பூஜைக்கு இவை மிகவும் உபயோகப்படுகிறன.
சிஷ்யர்: சில பாகங்களில் லௌகீகப் பொருட்களை பெற்றுக் கொள்வதற்காக பிரார்த்தனைகள் இருக்கின்றன. அதேபோல்தான் சமகத்திலும்.
ஆச்சாரியாள்: அதனாலென்ன
சிஷ்யர்: மோஷம் ஒன்றையே விரும்பும் முமுக்ஷு அப்பொருட்களைப் பற்றி விருப்பம் கொள்ளாமல் இருந்தாலும் அவனும் அம்மந்திரங்களை ஜெபிக்கலாமா? ருத்ரத்தை சன்யாசிகளும் ஜெபிக்கலாம் என்றுதான் சாஸ்த்திரம் கூறுகிறது. சன்யாசிகள் லௌகீகப் பொருட்களை விரும்பக் கூடாது என்பது அனைவரும் அறிந்ததே. அப்படி என்றால் அவர்கள் எவ்வாறு ருத்ரத்தை ஜெபிக்கலாம்?
ஆச்சார்யாள்: எப்போதெல்லாம் ஒருவன் வேத மந்திரங்களைச் ஜெபிக்கிறானோ அப்போதெல்லாம் அங்கு கூறப்பட்ட பொருட்களை அவன் விரும்புகிறான் என்று அர்த்தமில்லை ருத்ரம் போன்ற மந்திரங்கள் மிகவும் புனிதமானவை. அவைகளை ஸ்வரத்துடன் ஜெபித்தால் இறைவனின் அருள் கிடைக்கும். புனிதமாகும். ஆதலால் வேத மந்திரங்களின் பொருட்களுக்கு பிரார்த்தனை இருந்தாலும் ஒருவனின் மனம் அப்பக்கம் செல்லவில்லை என்றால் பலன் கிடைத்தே தீரும் என்ற நியமம் இல்லை.
சிஷ்யர்: வேதங்களின் சில பகுதிகள் குரு-சிஷ்ய பரம்பரையில் வரும் போது ஏதாவது விட்டு போயிருக்கின்றனவா?
ஆச்சார்யாள்: ஆம் யஜுர் வேதத்திற்கு பல சாகைகள் இருந்தன என்று கூறுவோம் இப்போது நமக்கு அவ்வளவு கிடைப்பதில்லை.
சிஷ்யர்: அனத்யயனத்தின்போது சாஸ்திரங்களை அத்யயனம் செய்வது கூடாது என்று சொல்கிறார்களே ஆச்சாரியர்களின் கருத்தும் அதுதானா?
ஆச்சார்யாள்: ஆம் அனத்யயனம் என்று கருதப்படும் நாட்களில் ஸாம்ப்ரதாயிகமான பாடங்கள் நடைபெறக்கூடாது.
சிஷ்யர்: அப்படி என்றால் அன்றைய தினம் ஒருவன் தான் கற்ற வேதங்களை தனக்குத்தானே சொல்லிக் கொள்ளக் கூடாது அதேபோல் தானாகவே சாஸ்திர புத்தகங்களையும் படிக்க கூடாது என்றா அர்த்தம்?
ஆச்சாரியாள்: இல்லை அம்மாதிரி அர்த்தம் இல்லை ஸாம்ப்பிரதாயிகமான பாடங்கள் நடைபெற கூடாது என்றே நான் கூறுகிறேன். முக்கியமாக பௌர்ணமிக்கும் அமாவாசைக்கும் அடுத்து வரும் நாளான ப்ரதீபத் அன்று இத்தகைய பாடங்கள் நடைபெறக் கூடாது.