ஜம்மு – தில்லி விமானத்தில் முறையாக முக கவசம் அணியாத 4 பயணிகள் பாதுகாவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
விமானப் போக்குவரத்து தலைமை இயக்ககம், பலமுறை எச்சரித்த பின்பும் சரியாக முக கவசம் அணியாத பயணிகளை விமானத்தில் இருந்து இறக்கிவிடும்படி விமான போக்குவரத்து நிறுவனங்களுக்கு கடந்த சனிக்கிழமை அறிவுறுத்தியிருந்தது.
இந்நிலையில், ஏர்-இந்தியாவின் துணை நிறுவனமான அல்லயன்ஸ் ஏர் விமானம் ஒன்று கடந்த செவ்வாய்கிழமை ஜம்முவில் இருந்து தில்லி சென்றது.
அதில் 4 பயணிகள் முறையாக முககவசம் அணியாமல் இருந்தனர். அவர்களை விமானப் பணியாளர்கள் திரும்பத் திரும்ப பலமுறை எச்சரித்தும் முறைப்படி முககவசத்தை அணியவில்லை.
எனவே அவர்களை விமானத்தில் இருந்து இறக்கிய பணியாளர்கள், விமான நிலைய பாதுகாவலர்களிடம் ஒப்படைத்தனர். திரும்பத் திரும்ப பலமுறை எச்சரிக்கை விடுக்கப்பட்டும் அவர்கள் மாறாததால் சக பயணிகளின் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்ககம் வழங்கியுள்ள அதிகாரத்தின்படி, மேற்கண்ட 4 பயணிகளும் 24 மாதங்கள் வரை தங்கள் விமானத்தில் பயணிக்க அல்லயன்ஸ் ஏர் நிறுவனம் தடைவிதிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.