சாலை போக்குவரத்தில் மத்திய அரசு புதிய அறிவிப்புகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.
புதிதாக ஃபாஸ்டேக் வசதி மூலம் டோல் கட்டணம் வசூலிக்கும் முறை கடந்த பிப்ரவரி மாதம் முதல் இந்தியா முழுவதும் கட்டாயமாக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஃபாஸ்டேக் வசதி இல்லாதவர்கள் இரட்டிப்பு கட்டணத்தை சுங்கக் கட்டணமாக செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று மக்களவையில் கேள்வி நேரத்தின் போது மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி ஒரு கேள்விக்கு பதிலளித்தார்.
அப்போது அவர் ஓராண்டிற்குள் நாடு முழுவதும் உள்ள டோல்கேட்கள் அகற்றப்படும் என கூறினார். மேலும், அவை அகற்றப்பட்டு ஜிபிஎஸ் வசதியுடன் ஃபாஸ்டேக் மூலம் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
கடந்த பிப்ரவரி மாதம் முதல் இந்தியாவில் 93 சதவிகித மக்கள் ஃபாஸ்டேக் மூலம் சுங்கக் கட்டணம் செலுத்துவதாக சாலை போக்குவரத்து அமைச்சம் தெரிவித்துள்ளது.
இதில் எஞ்சிய 7 சதவிகித பேர் ஃபாஸ்டேக் எடுக்காமல் இரட்டிப்பு கட்டணத்தை செலுத்தி வருகிறார்கள். அவர்களும் விரைவில் ஃபாஸ்டேக் முறைக்கு மாற்றப்படுவார்கள் என்று நிதின் கட்கரி கூறியுள்ளார்.
இந்தியாவில் புதிதாக விற்கப்படும் வாகனங்களுக்கு இலவசமாக ஃபாஸ்டேக் வசதி செய்து தரப்படுகிறது. அதேபோல பழைய வாகனங்களுக்கும் இலவசமாக இந்த வசதி செய்து தரப்படும் என்று உறுதியளித்தார்.